டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். கடைசியாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியாவுக்காக விளையாடிய நிலையில் அதன் பிறகு அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.
ஆஸ்திரேலிய தொடர் தென் ஆப்பிரிக்கா தொடர் என இரண்டு தொடர்களிலும் அவர் தேர்வு செய்யப்படாதது தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் முஹமது சமியின் முன்னாள் மனைவியான ஹசீம் ஜஹான், தமக்கு சமி மாதந்தோறும் வழங்கும் நான்கு லட்சம் ரூபாய் போதவில்லை என கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா மற்றும் நீதிபதி உஜ்ஜால் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சமி மாதத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் ஆதரவு தொகையாக வழங்கி வருவதாகவும், ஆனால் அது போதவில்லை என்றும் முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.
தற்போது மகள் வளர்ந்து வருவதால் அவருக்கு மூன்று லட்சம், தமக்கு 4 லட்சம் என மொத்தம் ஏழு லட்சம் ரூபாய் சமி வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் சமி, 2021- 22 நிதியாண்டில் 48 கோடி ரூபாயை வருமான வரியாக செலுத்தி இருப்பதாகவும், இதனால் தமக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியிருக்கிறார்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யக்கோரி முஹம்மது சமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. முகமது சமிக்கும் அவரது மனைவி ஹசின் ஜஹானுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஷமி தம்மை தாக்கியதாக கூறி அவருடைய மனைவி புகார் அளித்தார்.
இதனை அடுத்து இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது. முதலில் சமியின் குழந்தைக்கு 80 ஆயிரம் ரூபாய் வழங்க குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மனைவிக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஒன்றரை லட்சம் மற்றும் 2 லட்சம் ரூபாய் என உயர்த்தி தர வேண்டும் என்று கூறி இருந்த நிலையில் தற்போது இது போதாது என ஹசின் ஜஹான் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.