பும்ராவுக்கே காயம் வந்தாலும் உங்களை மட்டும் டீமில் சேர்க்க மாட்டோம்.. முகமது ஷமிக்கு ஏற்பட்ட நிலைமை
மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் விலகிய நிலையிலும் மூத்த வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக இதுவரை சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆகாத ஜம்மு காஷ்மீரின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம், முகமது ஷமி இனி எப்போதும் இந்திய அணிக்கு தேவை இல்லை என்பதையே தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் கூறுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் என தான் கடைசியாக பங்கேற்ற இரண்டு பெரிய தொடர்களிலும் விக்கெட் வேட்டை நடத்தி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார் முகமது ஷமி. அவர் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி, விக்கெட்களை அள்ளினாலும் அவருக்கு இந்திய அணியில் உடற்தகுதி இல்லை என்ற காரணத்தை வைத்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2023-க்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் முகமது ஷமி விளையாடவில்லை. சில மாதங்கள் முன்பு அவரது உடற்தகுதி குறித்துப் பேசிய அஜித் அகர்கர், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்குத் தேவையான முழுமையான உடற்தகுதியை ஷமி கொண்டிருக்கவில்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பையில் விளையாடிய ஷமி 7 போட்டிகளில் மொத்தம் 1383 பந்துகளை வீசி, 16.72 சராசரியுடன் 37 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இதில் மூன்று முறை ஒரே இன்னிங்ஸில் 5-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். தனது சிறந்த பந்துவீச்சாக ஒரு இன்னிங்க்ஸில் 90 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியிருந்தார்.
இந்த நிலையில், ரஞ்சி கோப்பை சீசனில் சிறப்பாக செயல்பட்ட மற்றொரு பந்துவீச்சாளரான ஜம்மு காஷ்மீரின் ஆகிப் நபிக்குத் தேர்வுக்குழுவினர் முன்னுரிமை அளித்துள்ளனர். இதன் மூலம் மூத்த வீரர்களை விட இளம் வீரர்களுக்கே அணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்பதை தேர்வுக் குழு சூசகமாக கூறி உள்ளது. இதனால் ஷமி இனி உள்ளூர் போட்டிகளில் விக்கெட்களை குவித்தாலும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
