
கேப்டன்களின் மனநிலை
இந்திய அணியைப் பொறுத்தவரை, தலைமையேற்கும் கேப்டன்களை பொறுத்து வீரர்களின் மனநிலை இருக்கும். குறிப்பாக, 2000த்துக்கு பிறகு. அதிலும் குறிப்பாக கங்குலியின் வருகைக்குப் பிறகு. சவுரவ் கங்குலி இந்திய அணியின் 'தி பெஸ்ட்' கேப்டன்களில் ஒருவர். ஆக்ரோஷத்தில் உச்சம் தொட்டவர். எந்தளவுக்கு என்றால், இந்திய மண்ணில் வைத்து இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தியதற்கு, இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தி, லார்ட்ஸ் பால்கனி அதிர தனது பனியனை கழற்றி சுழற்றி தனது கோபத்தை, பல நாள் ஆத்திரத்தை அந்த நொடியில் தீர்த்துக் கொண்டார் கங்குலி. இந்தியாவில் தோற்ற தொடருக்கும், இங்கிலாந்தில் ஜெயித்த தொடருக்கும் என இரண்டுக்குமே கங்குலி தான் கேப்டன்.

ஷேவாக்கை மாற்றிய தோனி
அதன் பிறகு இந்திய அணிக்கு கேப்டன்களான ராகுல் டிராவிட், கும்ப்ளே என இருவருமே மென்மையாக அணியை வழிநடத்தியவர்கள். ஆனால், இருவரும் முழு நேர கேப்டன்கள் கிடையாது. அப்போது தான் இந்தியாவுக்கு வரப்பிரசாதமாக அமைந்தவர் மகேந்திர சிங் தோனி. எதற்கும் கலங்காத, பதட்டப்படாத, உணர்ச்சிகளை வெளியே காட்டாத ஒரு கேப்டன். ஆனால், தோனிக்கு உண்மையில் கங்குலியைத் தாண்டி கோபம் வரும். கங்குலியை மிஞ்சிய ஆத்திரக்காரர். ஆனால், எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று இல்லாத ஒரு கேப்டன். அதனால், அவரது தலைமையில் கீழ் விளையாடிய வீரர்களுக்கு அதிக சுதந்திரம் கிடைத்தது. கங்குலி கேப்டன்ஷிப்பில் ஃபார்ம் இருந்தும் கன்சிஸ்டான்சி இல்லாமல், ஒருக்கட்டத்தில் அணியில் இருந்து வெளியேற வேண்டிய நிலையில் இருந்த ஷேவாக்கிற்கு தோனியின் கூல் கேப்டன்ஷிப், அணுகுமுறை கைக்கொடுத்தது. ஷேவாக்கை அவர் விருப்பத்துக்கு ஆட வைத்தார் தோனி. ஆனால், ஷேவாக்கின் ஸ்டைலை மாற்றவில்லை. அதே அதிரடி தான். ஆனால், அதை ஒழுங்குப்படுத்தினார்.

இயற்கையான குணம்
கம்பீர், யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா என்று பல மேட்ச் விண்ணர்களை உருவாக்கினார் கூல் தோனி. அணியின் வெற்றியும் சீராக இருந்தது. தோனியின் காலம் முடிவுக்கு வந்த நேரத்தில், அணியின் முழு நேர கேப்டனான விராட் கோலி மீண்டும் கங்குலியின் ஃபார்முலாவை கையிலெடுத்தார். ஆக்ரோஷ கேப்டன்ஷிப். அது அவராக தேடித் தேர்ந்தெடுத்த ஃபார்முலா அல்ல. இயற்கையாகவே அவரது குணம் அப்படி. போட்டியில் வெற்றிப் பெற வேண்டும் என்பதைத் தாண்டி, ஃபீல்டர்கள் கேட்சை விட்டால் கோபப்படுவது, பவுலர்கள் சரியாக வீசவில்லை என்றால் சுருக்கென முகத்தை காண்பிப்பது என்று மற்ற வீரர்கள் வெளியே சொல்ல முடியாத பல விஷயங்கள் இந்திய அணிக்குள் புதைந்து கிடக்கின்றன.

நெருடல்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், ரிவ்யூ எடுப்பதில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை "பின்னாடி நின்னுக்கிட்டு எண்ணப் பண்ணிட்டிருக்க நீ" மாடுலேஷனில் கோலி கோபப்பட்டு சென்றதை நாம் பார்த்தோம். இவரது இந்த ஆக்ரோஷம் பல தருணங்களில் வீரர்களிடம் நாம் காணலாம். அப்படி கோலிக்கு தோதான ஒரு வீரராக அமைத்திருக்கிறார் முகமது சிராஜ். இளம் பவுலர்.. கடந்த ஆஸ்திரேலிய தொடரில், அதிகம் விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற பெருமை.. இப்போது இங்கிலாந்து தொடரிலும் சிறப்பான பவுலிங் என்று அதகளப்படுத்தி வருகிறார். ஆனால், ஒரேயொரு நெருடலான விஷயம் மட்டும் நம் கண்களில் அடிக்கப்படுகிறது.

shut and go
ஆம்! ஒவ்வொரு முறை அவர் விக்கெட் எடுக்கும் போதும், பேட்ஸ்மேன்களை நோக்கி "வாயை மூடிக்கிட்டு வெளியே போகணும்" என்பது போல செய்கை காண்பிக்கிறார் சிராஜ். ஒவ்வொரு முறை அவர் விக்கெட் எடுக்கும் போதும், இதனை செய்கிறார். எப்போதாவது ஒரு வீரருக்கு இதுபோல் செய்தால் ஓகே. ஆனால், அவுட்டாக்கும் எல்லா வீரருக்கும் இதே பாணி தான் என்றால் என்ன செய்வது? ஒரு பவுலரை அவுட் செய்தால் கூட, இப்படி 'shut and go' என்று சொன்னால், அதை இந்திய ரசிகர்களே ரசிக்க மாட்டார்களே!. அவர் இப்படி செய்வது கூட பரவாயில்லை போல.. கேப்டன் என்கிற முறையில் விராட் கோலி இதனை குறைந்தபட்சம் கண்டிக்கக் கூடவா மாட்டார்? அட்லீஸ்ட், கூப்பிட்டு தனியாக சொல்லலாமே!. சிராஜ் போன்ற ஒரு திறன் வாய்ந்த பவுலர், தங்களது தொடக்க காலத்திலேயே கிரிக்கெட்டில் இருந்து காணாமல் போக வேண்டுமா?

கோலி செய்வாரா?
தோனி கேப்டன்ஷிப்பில் பல பவுலர்கள் இப்படி ஆக்ரோஷமான பாணியை, மாடுலேஷனை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர்கள் அனைவரையும் ஸ்பாட்டிலேயே கண்டிப்பர் தோனி. குறிப்பாக, ஸ்ரீஷாந்த் ஒருமுறை இதுபோன்று, சற்று கூடுதலாக கோபத்தை வெளிப்படுத்த, ஸ்டெம்பிற்கு பின்னால் இருந்த தோனி.. 'வாயை மூடிக் கொண்டு பந்து வீசு' என்று சொன்னதை மறக்க முடியுமா? இஷாந்த் ஷர்மா, ஷமி என்று தோனியிடம் திட்டு வாங்காத பவுலர்களே கிடையாது. ஆனால், அதன் பிறகு அவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டார்கள். இங்கே கேப்டன் கோலி தான் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்?

தேவையில்லாமல் வம்பு
முதல் டெஸ்ட் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவை அவுட் செய்துவிட்டு, சிராஜ் காட்டிய எக்ஸ்பிரஷன், உண்மையில் தேவையில்லாதது. சிராஜை துளி கூட மதிக்காமல் பேர்ஸ்டோ சென்றுவிட்டார். அதன் பிறகாவது கோலி அட்வைஸ் செய்திருக்கலாம். நமது திறமைசாலிகளை, தேவையில்லாத காரணங்களுக்காக நாமே வீணடிக்கக் கூடாது. ஆக்ரோஷம் என்பது பவுலிங்கில் இருக்க வேண்டும், விக்கெட் எடுப்பதில் இருக்க வேண்டும், போட்டியை எப்பாடுபட்டாவது ஜெயித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்க வேண்டும். அவுட் ஆகி செல்லும் பேட்ஸ்மேனிடம் தேவையில்லாமல் வம்பிழுப்பது என்பது சிராஜின் கேரியருக்கு நல்லதல்ல. அவரை இப்படி செய்யவிட்டு வேடிக்கை பார்ப்பது. ஒரு கேப்டனாக கோலிக்கும் அழகல்ல!.
Recommended Video

துவக்க காலம்
இந்திய வீரரும், இங்கிலாந்து தொடரில் வர்ணனையாளருமாக பணிபுரியும் தினேஷ் கார்த்திக் கூட, "பேர்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்தியப் பிறகு சிராஜ், ஆக்ரோஷமாக சில செய்கைகளைச் செய்தார். இது தேவையற்றது. சிராஜ் தற்போதுவரை ஒருசில டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். இது அவரின் துவக்கக் காலம்தான். போகப்போக, அனுபவம் கிடைத்த பிறகு, இதுபோன்ற செய்ய மாட்டார் என நம்புகிறேன்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. .


Click it and Unblock the Notifications