மும்பை : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோதலில் ஈடுபட்ட டிராவிஸ் ஹெட், சிராஜ் ஆகியோர் மீது ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் எடுத்தது. இதில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் விளாசி அசத்தினார்.

இதன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 175 ரன்களில் ஆட்டம் இழக்க 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எட்டி வெற்றி பெற்றது. இந்த நிலையில் சதம் அடித்துவிட்டு ஆட்டம் இழந்தபோது அவரை முகமது சிராஜ் திட்டியதாக புகார் எழுந்தது.
ஆனால் ஹெட் தான் தன்னை வம்பு இழுத்ததாக சிராஜ் குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் இருவரும் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் சிராஜுக்கு தடை விதிக்க வேண்டுமென ஆஸ்திரேலிய வீரர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த சூழலில் ஐசிசி யின் நன்னடத்தை விதிகளை மீறியதாக கூறி சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட்டுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இருவருக்கும் தலா ஒரு டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கிறது.
24 மாதத்தில் 3 அல்லது 4 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டால் டெஸ்ட் அல்லது இரண்டு t20 ஒருநாள் போட்டிகளில் தடை விதிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் இருவரும் தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டதாக ஐசிசி அறிவித்துள்ளது. இதனிடையே இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 14ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் நடைபெறுகிறது.