பெங்களூரு : ஹைதராபாத்தில் ஆட்டோ ஓட்டுநரின் மகனாக பிறந்து தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் நம்பர் ஒன் பௌலர் என்ற பெருமையை பெற்றிருக்கும் முகமது சிராஜுக்கு இன்று 30 ஆவது பிறந்தநாள் ஆகும்.திறமை இருந்தால் போதும், கடின உழைப்பு மூலம் நாம் எங்கு இருந்தாலும் ஜெயிக்க முடியும் என்பதற்கு சிராஜின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு.
மேலும் வாழ்க்கையில் வெற்றி பெற புதிய விஷயங்களை நாம் எப்படி செய்ய வேண்டும்? வாய்ப்பு கிடைக்கும்போது நாம் எவ்வளவு பெரிய தியாகங்களை செய்ய வேண்டும் போன்ற விஷயங்களுக்கும் முகமது சிராஜ் ஒரு எடுத்துக்காட்டு. முகமது சிராஜ் தன்னுடைய 23 ஆவது வயதில் முதன்முறையாக இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடினார்.

சிராஜிடம் திறமை இருந்தும் சர்வதேச கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்றால் புதிய திறமைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தார். அதன் பிறகு Wobble seam என்ற பந்து வகையை கற்றுக்கொண்டு பேட்ஸ்மேன்களுக்கு வில்லனாக மாறினார். ஆர் சி பி அணியில் பவுலிங் மொக்கையாக இருக்கும் என்று அனைவரும் கிண்டல் செய்வது உண்டு.
இந்த இமேஜை மாற்ற முகமது சிராஜ் போராடினார். தன்னுடைய ஆக்ரோஷமான பந்து வீச்சால் அடுத்தடுத்து இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் முறையாக 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது சிராஜின் தந்தை காலமானார்.
தந்தையின் மறைவுக்கு செல்ல வேண்டுமா? இல்லை அவருடைய கனவான இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாட வேண்டுமா என்ற குழப்பம் சிராஜுக்கு ஏற்பட்டது. அப்போது தன்னுடைய தந்தை கனவையே நான் நிறைவேற்றுகிறேன் என்று கூறி ஆஸ்திரேலியாவிலேயே தங்கி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார்.
தற்போது 27 டெஸ்ட்களில் விளையாடி 74 விக்கெட்களும், 41 நாள் போட்டிகளில் விளையாடி 68 விக்கெட்டுகளும், 10 டி20 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் கைப்பற்றி இருக்கிறார். மேலும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் விளையாடி தரவரிசையில் நம்பர் ஒன் இடம் பிடித்த வீரர் என்ற பெருமையை முஹமது சிராஜ் பெற்று இருக்கிறார்.
ஆசிய கோப்பை இறுதி போட்டியில் அவர் வீசிய பந்துவீச்சு எவராலும் மறக்க முடியாது. இதற்காக அவர் ஆட்டநாயகன் விருதை வென்றார். ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பௌலிங் ஆவரேஜ், ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர். பவர் பிளேவிலே ஒரு நாள் கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே இந்தியர்,கிரிக்கெட்டின் மெக்கா என்று அறியப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் சிறந்த பந்துவீச்சு செயல்பாடு வைத்திருக்கும் இந்தியர்.
ஐபிஎல் போட்டியில் இரண்டு மெய்டன்களை வீசிய முதல் பவுலர், பவர் பிளேவில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் போன்ற பல சாதனைகளை முகமது சிராஜ் படைத்திருக்கிறார். 2023 ஆம் ஆண்டு உலக கோப்பையை முகமது சிராஜ் வெல்லவில்லை என்றாலும் எதிர்காலத்தில் அதிக கோப்பைகளை இந்தியாக்காக அவர் வாங்கித் தருவார் என்று நாம் நம்பலாம்.