ஹைதராபாத் : 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தீயாய் பந்துவீசி 6 விக்கெட்களை சாய்த்து கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தி விட்டார் முகமது சிராஜ். இந்திய அணி எட்டாவது ஆசிய கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.
ஆனால், அந்த சாதனையை விட சிறப்பான செயல் ஒன்றை செய்தார். அந்தப் போட்டி முடிந்த உடன் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது அவருக்கு அளிக்கப்பட்டது. அதற்கான பரிசுத் தொகை ரூ.4 லட்சத்தை (5000 அமெரிக்க டாலர்) மழைக்கு நடுவே போட்டிகளை நடத்த உதவிய மைதான ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுத்தார்.

உண்மையில் முகமது சிராஜ் யார்? அவர் எங்கே இருந்து இந்திய அணிக்குள் நுழைந்தார்?
ஆட்டோ ஓட்டிய அப்பா : முகமது சிராஜ் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். அப்பா ஆட்டோ ஓட்டுனர். அவர் சம்பாத்தியம் போதாமல் அவரது தாய் சில வீடுகளில் பாத்திரம் தேய்த்து வீட்டை காப்பாற்றி வந்தார். கிரிக்கெட் பயிற்சி செய்வதை எல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத குடும்ப பின்னணி அவருடையது.
என்ஜினியர் கனவு : சிராஜின் தந்தைக்கு ஒரு கனவு இருந்தது. தன் மகன் சிராஜ் என்ஜினியர் ஆகி விட்டால் குடும்ப கஷ்டம் எல்லாம் தீர்ந்து விடும் என்பது தான் அது. ஆனால், அவரோ கல்லி கிரிக்கெட் ஆடுவதில் தன் நேரத்தை போக்கி வந்தார்.
சில கிரிக்கெட் பயிற்சியாளர்கள் கல்லி கிரிக்கெட் தொடர்களில் சிராஜின் ஆட்டத்தை பார்த்து விட்டு அவரை பயிற்சி செய்ய வருமாறும், மாநில அளவிலான போட்டிகளில் ஆடுமாறும் அவரை வற்புறுத்தி இருக்கின்றனர். ஆனால், ஹைதராபாத்தின் அதிகாரப்பூர்வமான கிரிக்கெட் தொடர்களில் அவர் பங்கேற்க மிகக் கடுமையான தேர்வு நடைமுறைகளை தாண்ட வேண்டி இருந்தது.
ஒரு வழியாக அவர் மாநில அளவிலான போட்டிகளில் ஆடத் துவங்கினாலும், போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெறும் நிலையில், அங்கே சென்று வருவது அவருக்கு கடினமான ஒன்றாக மாறியது. வீட்டில் இருந்த ஓட்டை வண்டி ஒன்றை தயார் செய்தார். ஆனால், அதற்கும் பெட்ரோல் வேண்டுமே?
அவரது அண்ணன் அப்போது படித்து வந்ததால், அவருக்கு கிடைக்கும் 100 ரூபாய் "பாக்கெட் மணி"யில் ரூ.70ஐ சிராஜ்-க்கு அளிப்பார். அதில் ரூ.40க்கு பெட்ரோல் போட்டு மைதானத்துக்கு சென்று வருவாராம் சிராஜ். பல மாதங்களுக்கு பின்னர் அவருக்கு போட்டியில் ஆடுவதற்கு சம்பளமாக ரூ.500 கிடைத்தது.
சிராஜ் முதலில் உள்ளுரில் ஆடிய போது சாதாரண செருப்பு காலில்தான் ஆடி இருக்கிறார். ஷூ வாங்க பணமில்லை என்பது தான் முக்கிய காரணம். அவர் உள்ளூர் தொடரில் சிறப்பாக ஆடியதால், அவருக்கு பெரிய கிரிக்கெட் தொடர் ஒன்றில் ஆட வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவருக்கு ஸ்பைக் வைத்த ஷூவை அளித்துள்ளனர். அதுதான் அவர் வாழ்வில் முதல்முறையாக அணிந்த ஷூ.
டென்னிஸ் பால் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படவே ஹைதராபாத் அண்டர் 23 அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், முக்கிய போட்டி ஒன்றின் போது அவருக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளது. ஆனால், இந்த வாய்ப்பை விட்டால் எல்லாமே போய்விடும் என்பதை உணர்ந்த அவர் மருத்துவமனையில் இருந்து நேராக ஆடுகளத்திற்கு சென்று சிறப்பாக விளையாடி அணியில் தன் இடத்தை உறுதி செய்தார்.
பின்னர் அங்கிருந்து படிப்படியாக முன்னேறி இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் இடம் பெற்று சாதித்தார் சிராஜ். 2௦20 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது சிராஜின் தந்தை காலமானார். அப்போது கொரோனா தனிமைப்படுத்தும் விதிமுறைகள் காரணமாக தனி அறையில் இருந்த சிராஜ், இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் தனியறையில் கதறி இருக்கிறார்.
ஆனால், அப்போதும் அவர் அந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். அதன்பின் அவர் இன்னும் ஆக்ரோஷமான வீரராக மாறி விட்டார். அதன் ஒரு வெளிப்பாடு தான் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் அவர் 6 விக்கெட் வீழ்த்திய நிகழ்வு. தான் எங்கிருந்து வந்தோம் என்பதை மறக்காத சிராஜ், ஆட்டநாயகன் விருதுக்காக கிடைத்த ரூ.4 லட்சத்தை ஊழியர்களுக்கு அளித்தார்.