மும்பை : பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், இது சீனியர் வீரர்கள் அனைவரும் ரஞ்சிப் போட்டியில் விளையாட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டிருந்தது. அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா, கில், பண்ட், முகமது சிராஜ் போன்ற வீரர்கள் ரஞ்சி போட்டியில் விளையாடிய தங்களது மாநில அணிகளுக்கு திரும்பினர்.
இந்த நிலையில் முஹமது சிராஜ் பழைய பந்தில் சரியாக பந்து வீசவில்லை எனக் கூறி அவரை சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து தேர்வு குழு நீக்கிவிட்டது. இதனால் முஹம்மது சிராஜ் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க கடுமையாக போராடி வருகிறார்.

நாக்பூரில் நடைபெற்ற ரஞ்சி போட்டி ஆட்டத்தில் விதர்பாக அணிக்கு எதிராக ஹைதராபாத் அணியில் சிராஜ் களமிறங்கினார். இதில் அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் பிறகு செய்தியாளிடம் பேசிய முகமது சிராஜ், "ஹைதராபாத் அணிக்காக பல ஆண்டுகள் கழித்து விளையாடுவது சந்தோஷத்தை தருகிறது".
"என்னுடைய பழைய நண்பர்களுடன் இணைந்து நான் மீண்டும் விளையாடினேன். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். டெஸ்ட் கிரிக்கெட் தான் என்னுடைய வாழ்க்கையே. எனக்கு எல்லாமே டெஸ்ட் கிரிக்கெட் தான் கொடுத்திருக்கிறது. இந்த சிவப்பு நிற பந்தை என் கையில் கொடுத்தால்,எனக்கு அளவற்ற சந்தோஷம் தரும்".
"நான் என்னுடைய செயல்பாடு குறித்து எல்லாம் யோசிக்காமல் என்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு நேரம் தொடர்ந்து பந்து வீசுவேன். இதனால்தான் டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. இந்த ஒரு போட்டியிலும் விளையாடாமல் இருக்கும் நேரத்தில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது மாநில அணிக்கு திரும்பி விளையாட வேண்டும் என நான் நினைக்கின்றேன்".
"சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மாநில அணியில் விளையாடும் போது அது அங்கு உள்ள இளைஞர்களுக்கு ஒரு ஊக்கத்தை கொடுக்கும். விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஸ்டார் வீரர்களுடன் அவர்கள் டிரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்வதன் மூலம் நிறைய கற்றுக் கொள்ள முடியும். இது இளைய தலைமுறையினருக்கு நிச்சயம் ஒரு நல்ல ஆரம்பம் தான்".
"அதேசமயம் ஒரு மனிதனுக்கு ஓய்வு என்பது மிகவும் முக்கியம். ஆனால் நாட்டுக்காக விளையாட போகிறோம் என்றால் எதையும் பற்றி யோசிக்காமல் பந்தை எடுத்துக் கொண்டு ஓடி வந்து வீசுவது தான் மிகவும் முக்கியம். நாட்டுக்காக விளையாடுவதை விட வேறு என்ன நமக்கு ஊக்கம் கிடைத்து விடப்போகிறது. நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது என்னுடைய சிறு வயது கனவு".
"தற்போது அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அதை நான் என் இரண்டு கைகளால் எடுத்துக் கொண்டேன். என்னுடைய கனவான இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது தற்போது நினைவாக இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கின்றேன். ஹைதராபாத் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் நல்ல முறையில் இருக்கிறார்கள்".
" வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் இருக்கிறார்கள். சூழலுக்கு ஏற்ப விளையாட அவர்கள் நிச்சயம் கற்றுக் கொள்வார்கள். ரஞ்சி போட்டியில் வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். ஆனால் நடுவர்கள் தங்களுடைய பணியை சரியாக செய்ய வேண்டும்.இது போன்ற போட்டிகளில் நடுவரின் பங்கு மிகவும் முக்கியம். மனிதர்கள் என்றால் தவறு செய்வார்கள் என்பது எனக்கு புரியும். ஆனால் ஒரே நாளில் ஆறு அல்லது ஏழு தவறுகளை செய்வது எல்லாம் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாது இந்த விஷயத்தில் பிசிசிஐ சரியான நடவடிக்கை எடுக்கும் என நான் நம்புகிறேன்" என சிராஜ் கூறியுள்ளார்.