மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட வீரர்கள் அடங்கி இருக்கிறார்கள். இந்த அணி தேர்வில் பல குழப்பங்களும் சர்ச்சைகளும் எழுந்து இருக்கிறது.
குறிப்பாக விஜய் ஹசாரே கோப்பையில் 750 ரன்களுக்கு மேல் அடித்திருக்கும் கருண் நாயர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இதை போன்று நட்சத்திர வீரர் முகமது சிராஜ் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, தற்போது இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட விதத்தை பார்க்கும் போது தேர்வு குழுவினர் முழுக்க முழுக்க ஆல்ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் வழங்கியிருக்கிறார்கள் என தெரிகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் நான்கு தரம் வாய்ந்த ஆல் ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா,அக்சர் பட்டேல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இருக்கிறார்கள்.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணி நெருக்கடியான கட்டத்தில் சமாளிக்கக்கூடிய திறனை நிச்சயம் பெற்றிருக்கிறது. ஆனால் என்னை அணியை தேர்வு செய்ய சொல்லியிருந்தால் நான் நிச்சயம் நான்கு வேக பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து இருப்பேன். நிச்சயம் நான் முஹமது சிராஜை அணியில் தேர்வு செய்து இருப்பேன்.
கடந்த முறை வெஸ்ட் இண்டீஸுக்கு இந்திய அணி 4 சுழற் பந்துவீச்சாளர்களை அழைத்து சென்றது. ஆனால் அதில் ஒரு சுழற் பந்துவீச்சாளர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதேபோன்று சார்ஜா, துபாயில் உள்ள மைதானங்கள் அனைத்தும் சுழற் பந்துவீச்சுக்கு எடுபடாத ஆடுகளங்களாக இருக்கின்றது.
எனவே அணியில் குறைகள் இல்லாமல் இல்லை. இருப்பினும் மொத்தமாக பார்க்கும்போது நல்ல பேலன்ஸ் இருக்கிறது என்று நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார். நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டது தேவையில்லாதது என்றும் அதற்கு பதில் சிராஜ் போன்ற அனுபவம் வாய்ந்த வீரரை அணியில் தேர்வு செய்திருக்கலாம் என பல விமர்சனங்கள் இருந்து வருகின்றன.