மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக முகமது சிராஜ் வலம் வருகிறார். பும்ரா இல்லாத நிலையில் கூட தனி ஆளாக நின்று இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியை இந்திய அணிக்காக வென்று கொடுத்திருக்கிறார். சிராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகமானார்.
8 ஆண்டுகளாக இந்திய அணிக்கு விளையாடி வரும் சிராஜ் இதுவரை 42 டெஸ்ட், 44 சர்வதேச ஒரு நாள் மற்றும் 16 சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி உள்ளார். அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கூட இந்திய அணியின் வெற்றிக்கு சிராஜ் முக்கிய பங்காற்றினார்.

இந்த நிலையில் தான் எவ்வளவு சாதித்தாலும் புகழின் உச்சிக்கு சென்றாலும், பழையதை மறக்க மாட்டேன் என்று சிராஜ் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் சாதாரண ஆட்டோக்காரரின் மகன். தான் எங்கிருந்து நான் இவ்வளவு தூரம் வந்தேன் என்பதை என்றுமே நான் மறக்க மாட்டேன்.
நான் சாதித்து விட்டேன். இல்லை நான் பணக்காரன் என்ற கர்வம் எனக்கு கொஞ்சம் கூட கிடையாது. நான் எப்போதுமே பழைய சிராஜாக பணிவுடன் இருக்கவே விரும்புகிறேன். அதற்காக பல முயற்சிகளை செய்கின்றேன். இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்பு எனக்கு எந்த நண்பர்கள் இருந்தார்களோ அதை நண்பர்கள் தான் இன்னும் எனக்கு இருக்கிறார்கள்.
அவர்களுடன் தான் எனது பொழுதை நான் கழித்து வருகின்றேன். நான் இந்திய அணியின் வீரராக மாறிவிட்டேன். இனி புதிய நண்பர்களுடன் தான் சுற்றுவேன் என்பதெல்லாம் எனக்கு கிடையாது. தற்போது என்னிடம் ரெஞ்ச் ரோவர் கார் இருக்கின்றது. அதை வைத்துக்கொண்டு எனது பழைய நண்பர்களுடன் தான் ஊர் சுற்றி வருகிறேன்.
நான் முன்பு எங்கு டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடினேனோ, அதேபோல் எனது நண்பர்களுடன் இணைந்து மீண்டும் டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். நான் முன்பு எப்படி இருந்தேனோ அதேபோல் தான் இருக்க விரும்புகின்றேன். இன்னும் சொல்லப்போனால் முன்பு நான் எந்த கிளாஸில் டீ குடித்தேனோ அதே கிளாஸில் தான் தற்போதும் டீ குடிக்கின்றேன். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் கிண்டல் செய்து கொண்டு நண்பர்களாக விளையாடி வருகிறோம்.
நான் டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் விளையாட செல்லும் போது என்னை ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக பார்க்க வேண்டாம். எனக்கு எந்த ஒரு ஸ்பெஷல் மரியாதையும் தர வேண்டாம். நாம் அனைவரும் சமம். என்னையும் சாதாரண ஒரு வீரர் போல் நடத்துங்கள் என்று தான் நான் சொல்வேன். இப்போது எல்லாம் யாராவது ஒருவர் வெற்றி அடைந்து விட்டால் ஆளே மாறி விடுகிறார்கள். ஆனால் எனக்கு அப்படி இருப்பது பிடிக்காது. எப்போதும் பழைய சிராஜாக பணிவுடன் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள். சில சமயம் நான் நன்றாக செயல்பட்டு வெற்றியைப் பெறலாம். ஆனால் வெற்றி என்பது நிலைத்து நிற்காது. எப்போது வேண்டுமானாலும் நம்மை விட்டு சென்று விடலாம் என்று சிராஜ் கூறியுள்ளார்.