இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முகமது சிராஜ் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கும் சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக சிராஜ் விளங்குகிறார்.
கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து ஒருநாள் கிரிக்கெட்டில் சிராஜ் மொத்தமாக 71 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் இந்த காலகட்டத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமை சிராஜுக்கு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் 2023 ஆம் ஆண்டு மட்டும் சிராஜ் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 47 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதில் 11 உலகக்கோப்பை ஆட்டத்தில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் பும்ரா 32 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில் சிராஜும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் விளையாடி 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் ஒட்டுமொத்த கவனமும் திரும்பியதால் சிராஜின் செயல்பாடு ரசிகர்களின் கவனம் பெறாமல் போய்விட்டது.
இதனால் சிராஜ் சரியாக விளையாடவில்லை என்பது போல் ஒரு இமேஜ் உருவாக்கப்பட்டது. இந்த தருணத்தில் அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இது சிராஜுக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பையில் ரிசர்வ் வீரராக கூட தாம் இடம்பெறாத வகையில் என்ன தவறு செய்தேன் என்ற பாணியில் சிராஜ் இருக்கிறார்.
இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி இமாச்சல் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணிக்காக சிராஜ் விளையாட முடிவெடுத்தார். ஆனால் தற்போது தான் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிவிட்டு சிராஜ் நாடு திரும்பி இருப்பதால் அவருக்கு கூடுதல் ஓய்வு வேண்டும் என மருத்துவ குழு அறிவுறுத்தி இருக்கிறது.
எனினும் சிராஜ் ஹைதராபாத் அணி கடைசியாக விளையாட போகும் ரஞ்சி லீக் ஆட்டத்தில் கண்டிப்பாக இடம் பெறுவேன் என சிராஜ் முடிவு எடுத்திருக்கிறார். விதர்பா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிராஜ் கண்டிப்பாக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.