மும்பை: பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமிற்கு இந்திய அணியின் நட்சத்திர பவுலர் முகமது ஷமி அச்சுறுத்தலாக இருப்பார் என்று முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என்று அனைவரின் கவனமும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி மீது திரும்பியுள்ளது. வழக்கமாக சிறந்த பந்துவீச்சாளர்களை மட்டுமே நம்பி களமிறங்கும் பாகிஸ்தான் அணிக்கு, இம்முறை பேட்ஸ்மேன்களும் பலம் சேர்க்கின்றனர். அதேபோல் இந்திய அணி நீண்ட மாதங்கள் ஓய்வுக்கு பின் ஷமி மற்றும் பும்ரா இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.

இதனால் பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிடும் போது இந்திய அணிக்கு சில சிக்கல்கள் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இதனால் பாகிஸ்தான் அணியை இந்திய அணியால் வீழ்த்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் பேட்டிங் ஃபார்ம் மிரட்டலாக உள்ளது. கடந்த 22 இன்னிங்ஸ்களில் 10 அரைசதங்கள், 6 சதங்கள் விளாசி இருக்கிறார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு, இந்திய அணியின் ஷமி அச்சுறுத்தலாக இருப்பார் என்று முன்னாள் வீரர் கைப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முகமது கைப் கூறுகையில், முகமது ஷமி இந்தியாவின் மிகச்சிறந்த பவுலர். பும்ரா இல்லாத போதும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.

ஐபிஎல் தொடரில் மட்டும் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றுள்ளார். எனது கணிப்பின் படி முகமது ஷமி, பாபர் அசாமிற்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார். இதுவரை இந்திய அணிக்கு எதிராக 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பாபர் அசாம் விளையாடியுள்ளார். இதனால் இந்திய அணிக்கு எதிராக வலிமையான தடத்தை பதிக்க பாபர் அசாம் முயற்சிப்பார் என்று பார்க்கப்படுகிறது.

இதுவரை பாபர் அசாம் vs விராட் கோலி என்று இருந்த போட்டி, தற்போது விராட் கோலி vs ஷாகீன் அப்ரிடி என்றும், பாபர் அசாம் vs முகமது ஷமி என்று மாறியுள்ளது. இதனால் இந்திய அணி பவுலர்களும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான சவால் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.