ஹாங்சோ : இதுவரை வெளிநாட்டுக்கே சென்று இருக்காத, புல் தரையில் அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை கூட பார்த்திராத மங்கோலிய நாட்டு மகளிர் கிரிக்கெட் அணி மிகப் பரிதாபமாக 15 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.
2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் செப்டம்பர் 23 அன்று துவங்க உள்ளது. முன்னதாக சில விளையாட்டுப் போட்டிகள் மட்டும் நடக்கத் துவங்கி உள்ளன.

அதில் மகளிர் டி20 கிரிக்கெட் தொடரும் ஒன்று. அதில் முதல் போட்டியாக இந்தோனேசியா - மங்கோலியா அணிகள் இடையே ஆன போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில்தான் மங்கோலிய வீராங்கனைகள் பேட்டிங்கில் சொதப்பி 15 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். அவர்கள் பேட்டிங் செய்ததை பார்த்த போதே அவர்களுக்கு போதிய பேட்டிங் பயிற்சி இல்லை என்பது தெரிய வந்தது.
முன்னதாக மங்கோலிய அணி பந்து வீசியபோது 38 வைடுகள் மற்றும் 10 நோ பால் வீசி இருந்தது. இந்தோனேசியா அந்த அணிக்கு எதிராக 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.
இந்தப் போட்டியில் 15 ரன்களில் ஆட்டமிழந்த மங்கோலிய அணியின் வீராங்கனைகள் போட்டி முடிந்த உடன் கண்ணீரில் மிதந்தனர். தாங்கள் மிக மோசமாக ஆடியதை ஏற்றுக் கொள்ள முடியாத அவர்கள் கதறிய காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் பின்புலம் அதை விட பரிதாபமானதாக இருந்தது.
அந்த அணியினர் சோகத்தில் இருந்தது குறித்து போட்டி முடிந்த பின் அந்த அணியின் பயிற்சியாளர் டேவிட் தலாலா பேட்டி அளித்தார்.
தங்கள் அணியின் வீராங்கனைகளின் சராசரி வயது 19தான். அவர்களின் அனுபவம் மற்றும் கிடைத்த வாய்ப்பை கொண்டு பார்க்கும் போது அவர்கள் இத்தனை தூரம் வந்ததே பெரிது. அணியில் பாதிக்கும் மேற்பட்ட வீராங்கனைகள் மங்கோலிய நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு சென்றதில்லை. மேலும், புல் தரை மைதானத்தில் அவர்கள் இதுவரை ஆடியதில்லை. தங்கள் நாட்டில் செயற்கை புல்தரை மைதானத்தில் அவர்கள் ஆடியும், பயிற்சி செய்தும் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு கிரிக்கெட் உடைகள், ஷூக்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க பணம் இல்லாமல் ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து ஏற்கனவே பயன்படுத்திய பழைய ஷூ மற்றும் உபகரணங்களை வாங்கித் தான் விளையாடி இருக்கிறார்கள்.
அவர்களிடம் வெறும் நான்கு பேட்கள் மட்டுமே உள்ளன. அந்த நான்கு பேட்களும் மங்கோலிய நாட்டின் பிரெஞ்சு தூதரின் மனைவி பரிசளித்தது. காரணம், அவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். அதிலும் கிரிக்கெட் ரசிகை என்பதால் மங்கோலிய இளம் பெண்களுக்கு உதவும் வகையில் நான்கு பேட்களை இலவசமாக பரிசளித்துள்ளார். இப்படி இலவசமாக பேட் எல்லாம் வாங்கி வந்தும் தங்களால் 15 ரன்களை தாண்ட முடியவில்லையே என்ற சோகத்தில் தான் அந்த வீராங்கனைகள் அழுதிருக்கின்றனர்.
பொதுவாக இது போன்ற பெரிய தொடர்களுக்கு வரும் அணிகள் குறைந்தது 15 வீராங்கனைகளை அழைத்து வரும். ஆனால், தங்களால் 12 பேரைத் தான் பயிற்சி அளித்து அழைத்து வர முடிந்தது என்கிறார் அந்த பயிற்சியாளர். அந்த 12 பேரில் ஒருவர் கூட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயிற்சி பெற்றதில்லை. அவர்களுக்கு பயிற்சி குறைவு என்றாலும் கிரிக்கெட் விதிகள் மட்டுமே நன்றாக தெரியும்.
இதில் நெகிழ்வான விஷயம் என்னவென்றால் மங்கோலிய அணிக்கு இந்த தொடருக்காக ஐந்து வாரம் பயிற்சியாளராக வந்துள்ள டேவிட் தலாலா இலவசமாகத்தான் பயிற்சி அளித்து வருகிறாராம்.
இன்னும் சில ஆண்டுகளில் மங்கோலியா கிரிக்கெட்டில் சிறக்க வாழ்த்துக்கள்!