இந்தியாவுக்கு வாங்க...தரம்சலா போட்டி குறித்து கவலைப்பட வேண்டாம்: பாக்.,கிடம் உறுதி அளித்த பிசிசிஐ
டெல்லி: இமாச்சல பிரதேசம் தரம்சலாவில் கிரிக்கெட் விளையாடுவது குறித்து பாகிஸ்தான் அணியினர் கவலைப்பட வேண்டாம் விரைவில் பிரச்சினை தீர்க்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சஷாங்க் மனோகர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் உறுதி அளித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள 7 நகரங்களில் இருவது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 8-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கிய போட்டி வருகிற 19-ந் தேதி இமாச்சலப் பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நடக்கிறது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டியை தரம்சலாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்துக்கு இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ரசிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் எதிரிகளால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்த நமது வீரர்களுக்கு அதுதான் மரியாதை என்றும் கூறியிருந்தார்.
தரம்சலா ஸ்டேடியம் அருகே தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் நினைவிடம் உள்ளது. இதனால் பாகிஸ்தான் அங்கு விளையாடுவது பலியான வீரர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும்.
இதனால் அங்கு போட்டியை நடத்த வேண்டாம் என்று அம்மாநில காங்கிரசும், பா.ஜ.க.வும் கூறிவருகின்றன. தரம்சலாவில் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் மொஹாலி அல்லது கொல்கத்தாவுக்கு இப்போட்டி மாற்றப்படலாம் என்று தெரிகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கான் பி.சி.சி.ஐ. அதிகாரிகள் என்னை தொடர்புக்கொண்டு இது குறித்து கவலைப்பட வேண்டாம், பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று கூறியுள்ளனர்.
மேலும் இந்த மாத இறுதியில் இந்தியா செல்லவுள்ள பாகிஸ்தான் அணிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications