தொடர் வெற்றி
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் நடந்த அனைத்து தொடர்களிலும் இளம் வீரர்களை கொண்டும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதற்கு காரணம் விராட் கோலி மற்றும் ரவிசாஸ்திரியின் சரியான காம்போ தான் எனக்கூறப்படுகிறது.
கோலி - சாஸ்திரி காம்போ
இந்திய அணிக்கு இதற்கு முன்னதாக அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தார். ஆனால் அவருடன் கோலிக்கு சரியான புரிதல் ஏற்படவில்லை. ஆனால் அடுத்து வந்த ரவிசாஸ்திரியுடன் கோலி நல்ல காம்போவாக மாறிவிட்டார். இதற்கு உதாரணம், கடந்த 2019ம் ஆண்டு ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்த பிறகும் கூட அவரையே மீண்டும் பயிற்சியாளராக நீட்டிக்க வேண்டும் என கோலி பரிந்துரைத்தார்.
ரவி சாஸ்திரி அணி
இந்நிலையில் இந்திய அணியின் வெற்றிகளுக்கு விராட் கோலி காரணம் இல்லை என்றும் ரவிசாஸ்திரி மட்டுமே காரணம் என மாண்டி பனேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணியின் கடந்த சில போட்டிகளை எடுத்து அலசிப்பார்த்தால் அது கோலியின் அணி அல்ல சாஸ்திரியின் அணி என்பது தெரியும்.
சாஸ்திரி கொடுத்த ஆச்சரியம்
இந்திய அணியில் தன்னம்பிக்கையை விதைத்து வருவது சாஸ்திரி மட்டுமே ஆகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கோலி வெளியேறிய பிறகும் இந்திய அணி வெற்றி பெற்றது ஆச்சரியமான ஒன்று. அந்த அணியின் முக்கிய வீரர்கள் கூட காயமடைந்தனர். எனினும் இந்தியா வெற்றி பெற்றது. இதற்கு காரணம் ரவி சாஸ்திரி பின்னால் இருந்து போட்ட திட்டங்களே ஆகும் என பனேசர் கூறியுள்ளார்.