சென்னை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பேட்டிங் செய்வதற்காக களமிறங்கிய போது, ஜியோ சினிமா செயலியில் கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை 2.2 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை ஜியோ சினிமா செயலியில் ஒரே நேரத்தில் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் ஒரு ஆட்டத்தை பார்த்ததில்லை. அந்த சாதனை தோனி பேட்டிங் செய்யும் போது படைக்கப்பட்டுள்ளது.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி கடைசி பந்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. முன்னதாக 15வது ஓவரில் சென்னை அணியின் டெவோன் கான்வே 50 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து கடைசி 30 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனி களமிறங்கினார். இதனால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அணிக்காக கேப்டன் தோனி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கையாக இருந்தனர். அதற்கேற்ப அஸ்வின் மற்றும் சாஹல் ஓவர்களில் பெரிதாக ரிஸ்க் எடுக்காத தோனி, ஸாம்பா வீசிய ஓவரில் ஒரு சிக்சரை விளாசி மிரட்டினார். கிட்டத்தட்ட 86 மீட்டர் தூரம் வரை சென்ற சிக்சரால், சேப்பாக்கம் மைதானம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ரசிகர்கள் நிமிர்ந்து அமர்ந்தனர். இதனைத் தொடர்ந்து ஹோல்டர் ஓவரில் ஜடேஜா 2 சிக்சர்களை விளாச, ஆட்டம் கடைசி ஓவருக்கு சென்றது.
கடைசி ஓவரில் தோனி களத்தில் இருக்கிறார் என்றாலே, பந்துவீச்சாளருக்கு பதற்றம் தொற்றி கொள்ளும். அதற்கேற்ப பதற்றத்தில் வீசப்பட்ட ஃபுல் டாஸ் பந்துகளை தோனி அடுத்தடுத்து சிக்சர்களாக விளாசினார். இதனால் கடைசி பந்தில் சிஎஸ்கே வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த பந்தில் சந்தீப் சர்மா சிறந்த யார்க்கரை வீசி ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். இருப்பினும் 41 வயதிலும் தோனியின் போராட்ட அனைவருக்கும் புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் தோனி களத்தில் இருந்த போது ஜியோ சினிமாவில் ஐபிஎல் போட்டியை பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை உச்சத்திற்கு சென்றுள்ளது. கிட்டத்தட்ட கடைசி ஓவரை தோனி எதிர்கொண்ட போது 2.2 கோடி பார்வையாளர்கள் ஜியோ சினிமா செயலியில் போட்டியை பார்த்துள்ளனர். முன்னதாக லக்னோ - ஆர்சிபி இடையிலான போட்டியே அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட போட்டியாக இருந்தது. ஆனால் 2 நாட்களில் தோனி அந்த சாதனையை முறியடித்துள்ளார். அந்தப் போட்டியில் 1.8 கோடி பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் பார்த்த நிலையில், நேற்றையப் போட்டியில் 2.2 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.