பாலக்கலே: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை ஆட்டத்தின் போது கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நாளைய ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடந்த முறை மோதிய போது வரலாற்று சிறப்புமிக்க ஒரு ஆட்டத்தை ரசிகர்களால் காண முடிந்தது. பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ராஃப்-க்கு எதிராக விராட் கோலியின் அந்த இரு சிக்சர்களை இன்றுவரை ரசிகர்களால் மறக்க முடியவில்லை.

தோல்வியின் விளிம்பில் இருந்து இந்திய அணி எழுந்து வந்து பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள். இதனால் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த ஆட்டம் இலங்கையில் நடைபெற்றாலும், ஏராளமான ரசிகர்கள் போட்டியை நேரடியாக பார்க்க வர தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டன. தற்போது ஹோட்டல்களும் ரசிகர்களின் அதிகபடியான வரவால், நிரம்பி வழிகின்றன. இவர்களுக்கு உணவு, மது என்று இலங்கை ஹோட்டல் நிர்வாகங்களும் போட்டிப்போட்டு கவனித்து வருகின்றன. ஒரு மாதத்திற்கு முன்பாக இலங்கையின் ஹோட்டல்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதனால் கொரோனா மற்றும் பொருளாதார சிக்கல்களால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்த இலங்கை ஹோட்டல் நிர்வாகங்கள், மீண்டு எழுந்துள்ளன. இலங்கை வந்துள்ள ரசிகர்கள் பலரும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டிக்கெட்டுக் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் முழுமையாக நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வழக்கமாக பாலக்கலேவில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதிகப்படியான மழை இருக்கும். இதுவரை இம்மாதங்களில் நடத்த திட்டமிட்ட 33 போட்டிகளில் 3 போட்டிகள் மட்டுமே முழுமையாக நடத்த முடிந்துள்ளது. இதனால் நாளை 90 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய இலங்கை - வங்கதேசம் இடையிலான ஆட்டத்திலேயே இரு முறை மழையால் ஆட்டம் தடைபட்டது. வழக்கமாக இலங்கையில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் கிரிக்கெட் போட்டிகள் நடக்காது. இம்முறை பிசிசிஐ-யின் விடாப்பிடியான முடிவால் ஹைபிரிட் மாடலில் ஆசியக் கோப்பை நடத்தப்படுகிறது. தற்போது மழை குறுக்கீடு இருக்கும் என்பதால், ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.