மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா அணி வென்றதை அடுத்து ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சி குழு வெற்றியுடன் விலகியது. இதனை அடுத்து புதிய அத்தியாயத்தை இந்திய கிரிக்கெட் தொடங்கும் விதமாக கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இதே போன்று ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்ற வீரர்கள் சர்வதேச t20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர். இதனால் கம்பீர் தலைமையில் புது பயிற்சியாளர் குழு இந்திய அணியை வழிநடத்த இருக்கின்றது. கம்பீர் பயிற்சியாளராக தலைமை ஏற்ற பிறகு தமக்கு சில முன்னாள் வீரர்கள் பயிற்சியாளராக வேண்டுமென கூறியிருந்தார்.

அதில் சில பெயர்களை பிசிசிஐ நிராகரித்தது. இந்த நிலையில் தமக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக மார்னே மார்க்கல் கண்டிப்பாக வேண்டும் என அவர் வலியுறுத்தி இருந்தார். எனினும் இதற்கு பிசிசிஐ யோசித்தது. காரணம் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிப்பதை பிசிசிஐ முற்றிலும் நிறுத்திவிட்டது.
இந்த நிலையில் மீண்டும் பழைய முறைப்படி வெளிநாட்டு பயிற்சியாளரை கம்பீர் கேட்கிறார் என பிசிசிஐ யோசித்தது. இதனால் இலங்கைக்கு எதிரான தொடரில் தற்காலிக பந்துவீச்சு பயிற்சியாளர் உடன் இந்தியா சென்று ஒரு நாள் தொடரில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் கம்பீரின் வற்புறுத்தலை அடுத்து தென்னாபிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மார்னே மார்க்கேல் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு பல இளம் வீரர்களை வழி நடத்தி இருக்கிறார். 39 வயதான மார்னே மார்க்கல் இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 309 விக்கெட்டுகளையும், 117 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 188 விக்கெட்களையும் 44 சர்வதேச டி20 போட்டிகள் விளையாடி 47 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்கள்.
இதேபோன்று ஐபிஎல் தொடரில் கம்பீருடன் கொல்கத்தா அணிக்காக மார்க்கேல் விளையாடி இருக்கிறார். இதனால் இருவருக்கும் நல்ல உறவு ஏற்பட்டுள்ள நிலையில் மார்னே மார்க்கேலை இந்திய அணிக்கு கம்பீர் கொண்டு வந்திருக்கிறார். மார்க்கலின் அனுபவம் நிச்சயம் இந்திய வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மார்க்கலேவின் பதவிக்காலம் தொடங்குகிறது.இதை அடுத்து மார்க்கலுக்கு வங்கதேசத்துக்கு எதிரான இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடரில் முதல் பணியாக கருதப்படுகிறது.