கொழும்பு: இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இன்று டோணி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். 5 பவுண்டரிகளும், 1 சிக்சரும் விளாசி அவர் ரசிகர்களை மகிழ்வித்தார்.
1 ரன்னில் அரை சதம் கடக்கும் வாய்ப்பை தவறவிட்டார் டோணி. அந்த ரன்னை எடுத்திருந்தால் அது இவரின் 100வது அரை சதமாக இருந்திருக்கும். ஆனால், டோணி விடுவாரா. நாட்அவுட்டாக நின்றதன் மூலம், புது சாதனை படைத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 73 முறை நாட்-அவுட்டாக கடைசி வரை களத்தில் நின்றதன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் பொல்லாக் மற்றும் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் ஆகியோர் தலா 72 முறை கடைசி வரை நாட்அவுட்டாக நின்றவர்களாகும்.
கடந்த போட்டியில் இதை சமன் செய்த டோணி, இப்போட்டியில் அதை தகர்த்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் கடைசி வரை களத்தில் நின்று சாதிக்கும், உலகின் சிறந்த பிஷினர் தான்தான் என்பதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார் டோணி.
மேலும், வெற்றிகரமான ரன் சேஸிங் போட்டிகளில் டோணியின் சராசரி 101.84 ஆகும். 1000 ரன்களையாவது கடந்த பேட்ஸ்மேன்களில், இப்படி 100க்கு மேல் ரன் சராசரி வைத்துள்ளது டோணி மட்டுமே.