பார்படோஸ்: 2024 டி20 உலக கோப்பையில் குரூப் சுற்று அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் மோசமான பேட்டிங் செயல்பாடு குறித்த புள்ளி விவரம் ஒன்று வெளியாகி உள்ளது.
குரூப் சுற்றில் இன்னும் இரண்டு போட்டிகளே மீதம் உள்ள நிலையில் இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் முதல் 15 இடங்களில் ஒரு இந்திய பேட்ஸ்மேன் கூட இடம்பெறவில்லை. 17வது இடத்தில் ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளார். அவர் மூன்று போட்டிகளில் விளையாடி 96 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்திய அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட மூன்று போட்டிகளில் 100 ரன்களை தாண்டி ரன் குவிக்கவில்லை. இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் இருக்கிறார். அவர் மூன்று போட்டிகளில் 167 ரன்கள் குவித்துள்ளார். அடுத்த இரண்டு இடங்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் மார்க்ஸ் ஸ்டோனிஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் உள்ளனர். ஸ்டோனிஸ் மூன்று இன்னிங்ஸ்களில் 156 ரன்கள் குவித்துள்ளார். ட்ராவிஸ் ஹெட் 4 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் குவித்துள்ளார். நான்காவது இடத்தில் அமெரிக்க அணியின் ஆரோன் ஜோன்ஸ் இடம் பெற்றுள்ளார். அவர் மூன்று போட்டிகளில் 141 ரன்கள் எடுத்துள்ளார். ஐந்தாவது இடத்தில் ஸ்காட்லாந்து அணியின் பிரண்டன் மெக்மில்லன் இடம் பெற்றுள்ளார். அவர் மூன்று இன்னிங்ஸ்களில் 140 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.
இந்திய அணி தனது மூன்று போட்டிகளை ஆடிய அதே நியூயார்க் பிட்ச்சில் அதிக போட்டிகளை ஆடிய பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த பாபர் அசாம் 4 இன்னிங்ஸ்களில் 122 ரன்கள் சேர்த்து ஏழாவது இடத்தில் இருக்கிறார். அதே அணியை சேர்ந்த முகமது ரிஸ்வான் 110 ரன்கள் குவித்து பத்தாவது இடத்தில் இருக்கிறார். இப்படி மற்ற அணிகளின் வீரர்கள் அனைவரும் முதல் 10 இடங்களில் இடம் பெற்ற நிலையில் இந்திய வீரர்கள் யாரும் முதல் பத்து இடங்களில் இடம்பெறவில்லை.
நியூயார்க் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இல்லை என்ற ஒரு காரணத்தை மட்டுமே இதற்கு சொல்ல முடியாது. இந்திய அணியில் ரிஷப் பண்ட் மட்டுமே ஓரளவு சிறப்பாக ஆடி மூன்று இன்னிங்ஸ்களில் 96 ரன்கள் சேர்த்துள்ளார். அவர் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்திருக்கிறார்.
அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ரோஹித் சர்மா. அவர் மூன்று இன்னிங்ஸ்களில் 68 ரன்கள் சேர்த்து 34 ஆவது இடத்தில் இருக்கிறார். சூர்யகுமார் யாதவ் 59 ரன்கள் சேர்த்து 46 வது இடத்தில் இருக்கிறார். 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலின் முதல் 50 இடங்களில் மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். விராட் கோலி வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து முதல் 150 இடங்களில் கூட இடம் பெற அளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறார்.
இந்த நிலையில் சூப்பர் 8 சுற்றிலாவது இந்திய பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் ரன் குவித்தால் மட்டுமே இந்திய அணியால் அரை இறுதிப் போட்டி வரை முன்னேற முடியும்.