மும்பை: 2025-ம் ஆண்டு இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றது மட்டுமின்றி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா எனப் பெரிய அணிகளையும் துவம்சம் செய்துள்ளது.
இந்திய அணியின் இந்த அசுர வளர்ச்சிக்கு பேட்ஸ்மேன்கள் மட்டும் காரணமல்ல; எதிரணிகளைத் திணறடித்த பவுலர்களின் பங்கும் மிக முக்கியம். 2025-ம் ஆண்டில் இந்திய அணிக்காக அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 பவுலர்கள் யார் என்பதை இங்கே பார்க்கலாம். நம்பர் 1 இடத்தில் இருப்பது நம்ம தமிழக வீரர் என்பது கூடுதல் சிறப்பு.

இந்த ஆண்டு இந்திய பவுலிங்கின் "சூப்பர் ஸ்டார்" என்றால் அது வருண் சக்கரவர்த்தி தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய இந்த மிஸ்டரி ஸ்பின்னர், 2025-ல் மட்டும் 20 போட்டிகளில் ஆடி 36 விக்கெட்டுகளை அள்ளிக்குவித்துள்ளார். இவரது பவுலிங் சராசரி 13.19 மற்றும் எகானமி வெறும் 7.08 தான். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மட்டும் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
குறைவான போட்டிகளில் ஆடினாலும், தரமான சம்பவங்களைச் செய்தவர் குல்தீப். வெறும் 10 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். மிடில் ஓவர்களில் பார்ட்னர்ஷிப்பை உடைப்பதில் இவர் கில்லாடி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
பவர்பிளே மற்றும் டெத் ஓவர் என எங்கு கொடுத்தாலும் கட்டுக்கோப்பாக வீசக்கூடிய அக்சர் படேல், 19 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது எகானமி ரேட் 6.93 என குறைவாக உள்ளது. ரன்களைக் கட்டுப்படுத்தி விக்கெட் எடுப்பதில் வல்லவர் என்றாலும் இந்த ஆண்டு டி20 பந்துவீச்சில் சற்று சுமாரான செயல்பாட்டை தான் வெளிப்படுத்தி இருக்கிறார்.
வேகப்பந்து வீச்சாளர்களின் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் முன்னணியில் உள்ளார். 12 போட்டிகளில் விளையாடிய அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாகப் புதிய பந்திலும், டெத் ஓவர்களிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்குத் தூணாக இருந்துள்ளார்.
பணிச்சுமை மேலாண்மை காரணமாகக் குறைவாக, 13 போட்டிகளிலேயே பும்ரா விளையாடினார். இருப்பினும், தனது துல்லியமான பந்துவீச்சால் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றி டாப் 5 பட்டியலில் ஐந்தாவதாக இடம்பிடித்துள்ளார்.
2025-ல் இந்திய அணி மொத்தம் 21 டி20 போட்டிகளில் விளையாடி 16-ல் அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தை 4-1 எனவும், ஆஸ்திரேலியாவை 2-1 எனவும், தென்னாப்பிரிக்காவை 3-1 எனவும் வீழ்த்தியதுடன், ஆசியக் கோப்பையையும் வென்றுள்ளது. அடுத்த ஆண்டு உலகக்கோப்பை வரவுள்ள நிலையில், வருண் சக்கரவர்த்தி - குல்தீப் யாதவ் கூட்டணி எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!