புனே : இந்திய கிரிக்கெட்டில் பெரியதாக சாதித்த வீரர்கள் காலில் ரசிகர்கள் விழுவதை நாம் பார்த்திருப்போம். கவாஸ்கர்,கபில்தேவ், சச்சின், கங்குலி, சேவாக், தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா என கிரிக்கெட் வீரர்கள் மாறினாலும் ரசிகர்கள் அவர்களை ஹீரோவாக பார்ப்பதை நிறுத்தவே இல்லை.
சிலர் கிரிக்கெட் வீரர்களை கடவுளாக கூட பார்க்கும் நிலை நமது நாட்டில் இருக்கிறது. ஆனால் 26 வயதான சர்வதேச அரங்கில் பெரிய சாதனை எதுவும் செய்யாத ஒரு வீரர் காலில் ரசிகர்கள் விழுந்து நாம் பார்த்திருக்கிறோமா?

ஆனால் அதுதான் நடந்திருக்கிறது. இதற்கு காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக விளங்கி வருபவர் ருதுராஜ் கெய்க்வாட். 26 வயதான ருதுராஜ், பல்வேறு போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற காரணமாக இருந்திருக்கிறார். இதனால் ருதுராஜ்க்கு சென்னையில் அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். சிஎஸ்கே அணியின் எதிர்கால கேப்டன் என்றும் ருத்ராஜை பலரும் கருதி வருகிறார்கள்.
அவ்வளவு ஏன் ருத்ராஜூம் சென்னை மீதான பாசத்தால் தன்னுடைய திருமண போட்டோ சூட்டை தமிழக முறையில் நடத்தி ரசிகர்களுக்கு டெடிகேட் செய்வதாக கூறியிருந்தார். இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் திருமணமாகி தேன்நிலவு கொண்டாடாமல் டிஎன்பிஎல் பாணியில் மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் மகாராஷ்டிரா பிரிமியர் லீக் தொடரில் விளையாடி வருகிறார்.
இதில் புனே அணிக்காக ருதுராஜ் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் வந்து ருதுராஜ் காலில் விழுந்தார்.
இதைப் பார்த்ததும் ரசிகர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். சர்வதேச அரங்கில் எவ்வித சாதனையும் செய்யாத 26 வயது வீரருக்கு இவ்வளவு மரியாதையா என்று பலரும் ஆடிப் போய்விட்டார்கள்.
இளம் வயது வீரரான தமக்கு இவ்வளவு மரியாதை கிடைக்கும் என்று ருதுராஜே கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். சிஎஸ்கேவில் விளையாடியதால் ருதுராஜ் கெய்க்வாட் தற்போது கிரிக்கெட் உலகில் மதிக்கப்படும் ஒரு வீரராக மாறிவிட்டார்.