15 கோடிக்கு வேட்டு.. பிஸினஸ் நண்பர் மீது வழக்கு தொடர்ந்த தோனி.. என்ன நடந்தது?
ராஞ்சி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மோசடியால் பல கோடி ரூபாய் இழந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தோனியின் தொழில் பங்குதாரரான அர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ரூ.15 கோடி மோசடி செய்துள்ளதாக தோனி சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.
அர்கா ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட்டின் சௌமியா பிஸ்வாஸ் மற்றும் மிஹிர் திவாகர் ஆகியோர் மீது ராஞ்சி நீதிமன்றத்தில் தோனி சார்பில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இதனால் கிரிக்கெட் உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் அகாடமியை அமைப்பதற்காக எம்எஸ் தோனியுடன் அர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த திவாகர் ஒப்பந்தம் செய்தார். அதற்கு தோனி சார்பில் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது, ஆனால் மிஹிர் திவாகர் கொடுத்த நிபந்தனைகளை பின்பற்றவில்லை.
திவாகர் அர்கா ஸ்போர்ட்ஸ் உரிமைக் கட்டணத்தைச் செலுத்தி தோனியுடன் லாபத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் திவாகர் அவ்வாறு செய்யவில்லை. இதனால் தோனிக்கு 15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிபந்தனைகளுக்கு இணங்காததால் 2021 ஆகஸ்ட் 15 அன்று அர்கா ஸ்போர்ட்ஸுக்கு தோனி நோட்டீஸ் அனுப்பினார். அப்போது அர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமையும் ரத்து செய்யப்பட்டது. தோனி தனது தொழில் பங்குதாரர் திவாகருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இதை அடுத்து ராஞ்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.
விதி அசோசியேட்ஸ் மூலம் எம்எஸ் தோனி சார்பில் தயானந்த் சிங் என்பவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். 15 கோடி என்பது பெரிய தொகை என்பதால் இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications