மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோணி களத்தில் எப்போதுமே அமைதியாகவும் வீரர்களை திட்டாமல் இருப்பார் என்பதால் அவரை ரசிகர்கள் கேப்டன் கூல் என்று அழைப்பார்கள். ஆனால் தோனியும் சில சமயம் தன்னுடைய நிதானத்தை இழந்து கோபத்தை வீரர்களிடம் காட்டி இருக்கிறார்.
அந்த நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் மோகித் சர்மா தோனிக்கும் தமக்கும் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், "சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் நாங்கள் விளையாடினோம்."

"அந்த போட்டியில், தோனி ஈஸ்வர் பாண்டேவை பந்து வீச அழைத்தார். ஆனால் அவர் என்னை தான் பந்து வீச சொன்னார் என நினைத்து பந்தை வாங்கிவிட்டு பாதி தூரம் ஓடிவிட்டேன். அப்போது தோனி என்னை நிறுத்தி, நீ ஏன் வந்தாய் நான் ஈஸ்வர் பாண்டே தானே அழைத்தேன் என்று கூறினார்."
"ஆனால் நடுவர் மோகித் சர்மா பந்து வீச ஆரம்பித்து விட்டார். இதனால் இப்போது மாற்ற கூடாது.மோகித் சர்மா தான் பந்து வீச வேண்டும் என்று நடுவர் கூறிவிட்டார். இதனால் கடுப்பான தோனி களத்திலே என்னை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினார். ஆனால், நான் யூசுப் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினேன். அப்போது நாங்கள் கொண்டாடினோம். சரி விக்கெட் எடுத்து விட்டதால் தோனி நம் மீது கோபப்பட மாட்டார் என்று நினைத்தேன்."
"ஆனால் கொண்டாட்டத்தின் போதும் தோனி என்னை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். தோனிக்கும் எனக்கும் நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றது. அவர் எப்போதுமே அமைதியாக தான் இருப்பார். ஆனால் சில சமயம் நிதானத்தை இழந்து விடுவார். அவருடன் அமர்ந்து நீங்கள் விளையாடினால், வாழ்க்கையில் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்."
கிரிக்கெட் ஒரு வீரரை எவ்வாறு நல்ல மனிதனாக மாற்றும் என்பதை தோனி கற்றுத் தந்துள்ளார் என்று மோகித் சர்மா கூறினார். 36 வயதான மோகித் சர்மா சிஎஸ்கே அணிக்காக 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடினார். அறிமுக தொடரில் சிஎஸ்கே அணிக்காக 20 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், 2014 ஆம் ஆண்டு சீசனில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் தொப்பியை வென்றார். நான்கு சீசன் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அவர் மொத்தமாக 69 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தோனி கேப்டனாக இருந்த போது தான் மோகித் சர்மா இந்திய அணியில் விளையாடினார்