
சிஎஸ்கே அணியின் கேப்டன்
முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், ஐபிஎல் தொடரின் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்எஸ் தோனி, அனைவராலும் பெரிதும் விரும்பப்படுபவர். அவர் கடந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதி தோல்விக்கு பிறகு சர்வதேச தொடர்களில் பங்கேற்கவில்லை என்றபோதிலும், தற்போதுவரை அனைவராலும் விரும்பப்படும் நபராக உள்ளார் தல தோனி.

தோனி குறித்து பாராட்டு
சிஎஸ்கே அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி உள்ள நிலையில், அவருடன் இணைந்து இந்திய அணி மற்றும் சிஎஸ்கே அணியில் விளையாடியுள்ள மோஹித் சர்மா, தோனி மிகச்சிறந்த தலைவர் என்று கூறியுள்ளார். கேப்டனுக்கும் தலைவனுக்கும் வித்தியாசம் உள்ளது என்றும் தோனி மிகச்சிறந்த தலைவன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோல்வியை முன்நின்று ஏற்பவர்
கேப்டனாக தோனி பணிபுரிந்து அணியின் வெற்றியின்போது அவரை எங்கேயும் காண முடியாது என்றும், ஆனால் அணி தோல்வியடைந்தால், முன்நின்று அந்த தோல்வியை ஏற்பவர் என்றும் மோஹித் சர்மா தெரிவித்துள்ளார். தோனியின் பணிவு மற்றும் நன்றியுணர்ச்சி அவரை மற்ற வீரர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

காத்திருக்கும் மோஹித் சர்மா
கடந்த 2 வருடங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டுவரும் மோஹித் சர்மா, ஐபிஎல்லின் இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக மோதவுள்ளார். ஐபிஎல் சீசன் காலவரையற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொடருக்காக காத்திருக்கிறார். இந்நிலையில், இளம் வீரர்களுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி தயாராக உள்ளதாகவும், ரிக்கி பாண்டிங்கிடம் சிறந்த பயிற்சியை பெறுவது உற்சாகம் அளிப்பதாகவும் மோஹித் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











