மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் பேச்சிற்காக தனி ரசிகர் கூட்டம் உண்டு. அந்த வகையில் ஒவ்வொரு முறையும் தோனியிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, அவர் அளிக்கும் பதில்கள் வாழ்க்கை தத்துவங்களாக மாறிவிடும்.
Definitely Not என்று ஒரேயொரு வார்த்தை இளைஞர்கள் மத்தியில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன் தோனியின் தத்துவ வார்த்தைகளை பார்க்கலாம்.

2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற பின், கேப்டன் தோனியை ரவி சாஸ்திரி பேட்டி எடுத்தார். அந்த பேட்டியை தொடங்குவதற்கு முன், நீங்கள் எழுதிய கட்டுரையை படித்தேன். நீங்கள் ஆஸ்திரேலியா அணியே உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறினீர்கள். ஆனால் இந்திய அணி நீங்கள் எழுதியது தவறு என்று நிரூபித்துவிட்டோம் என்று கூறினார். இன்றும் தோனியின் அந்த பேச்சு ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

2007ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பின், மும்பை சாலையில் இந்திய வீரர்கள் பேருந்தில் ஊர்வலமாக உலகக்கோப்பையை எடுத்து வலம் வந்தார்கள். அப்போது தோனி பேசுகையில், மும்பை நகரம் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும் என்று எங்களிடம் சொல்வார்கள். ஆனால் நானும் எனது வீரர்களும் ஒட்டுமொத்த மும்பை நகரத்தையும் நிற்க வைத்துவிட்டோம் என்று கூறினார்.

அதேபோல் மார்ச் 12, 2011ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. அந்த தோல்விக்கு பின் தோனி பேசுகையில், "நீங்கள் மைதானத்திற்கு வரும் கூட்டத்திற்காக விளையாடவில்லை. நாட்டுக்காக விளையாடுகிறீர்கள்" என்று இந்திய வீரர்களுக்கு அறிவுரை கூறினார்.
உலகக்கோப்பைத் தொடரின் போது தோனியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, முற்றுப்புள்ளி வரும் வரை, எந்தவொரு வாக்கியமும் முற்றுப் பெறுவதில்லை என்று தோனி அளித்த பதில் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. இதனை வாழ்க்கைக்கான தத்துவமாகவும் ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.

2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மோசமான தோல்வியை அடைந்தது. அப்போது தோனியிடம், இங்கிலாந்து அணியிடம் அடைந்த தோல்வியை காட்டிலும் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த ஒயிட் வாஷ் அதிக வலியை கொடுக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தோனி, என்னை பொறுத்தவரை மரணம் என்பது ஒன்று தான். எந்த வழியில் மரணிப்பது என்று யாரும் பார்ப்பதில்லை என்று அளித்த பதில் இன்று வரை தோல்விக்கான சிறந்த பதில்.

ஐபிஎல் தொடரின் போது புனே அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெய்ல் 175 ரன்களை விளாசினார். அப்போது தோனி தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்க்கை என்பது சரியான முடிவுகளை எடுப்பது தான். கிறிஸ் கெயிலின் பேட்டிங்கை பார்த்த பின், விக்கெட் கீப்பராக வேண்டும் என்ற சரியான முடிவை நான் எடுத்துக்கிறேன் என்று நினைக்கிறேன் என்று பதிவிட்டது நாஸ்டால்ஜிக் சம்பவம்.

2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற பின் இந்திய அணி வீரர்களிடம் என்ன பேசினீர்கள் என்ற எழுப்பப்பட்ட கேள்விக்கு, "கடவுள் வந்து நம்மை காப்பாற்றப் போவதில்லை" என்று அளித்த பதில், ஒவ்வொரு முறையும் சிக்கலில் சிக்கும் மனிதர்களுக்கு தோனி கொடுத்த அட்வைஸாகவே பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.