ராஞ்சி: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு முன்பே, ராஞ்சியில் ஒரு 'தரமான சம்பவம்' நிகழ்ந்துள்ளது. இந்திய அணியின் 'ரன் மெஷின்' விராட் கோலி, முன்னாள் கேப்டன் தோனியின் பண்ணை வீட்டிற்குச் சென்றதோடு, தோனியின் காரில் ஜாலியாகப் பயணம் செய்த வீடியோ இணையத்தை அதிர வைத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த சோகத்தில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு, இந்த "தல - கோலி" சந்திப்பு ஒரு மிகப்பெரிய உற்சாக மருந்தாக அமைந்துள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ. (JSCA) மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் ராஞ்சிக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை பயிற்சியை முடித்த கையோடு, விராட் கோலி தனது முன்னாள் கேப்டன் தோனியின் பண்ணை வீட்டிற்குச் சென்றார். கோலி மட்டுமல்லாமல், தோனியின் "செல்லப் பிள்ளை"களான ரிஷப் பண்ட் மற்றும் சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் தோனியைச் சந்திக்கச் சென்றனர்.
இந்தச் சந்திப்பின் முக்கிய அம்சம் என்னவென்றால், தோனி தனது காரை ஓட்ட, அவருக்குப் பக்கத்து சீட்டில் விராட் கோலி அமர்ந்து செல்லும் வீடியோதான். வின்டேஜ் கார்கள் மற்றும் பைக்குகளின் காதலரான தோனி, தனது காரில் விராட் கோலியை அழைத்துச் செல்லும் காட்சியை ரசிகர்கள் "இந்த ஆண்டின் சிறந்த சந்திப்பு" என்று கொண்டாடி வருகின்றனர்.
ராஞ்சியில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டிக்கான அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமான ஒருநாள் கேப்டன் சுப்மன் கில், கொல்கத்தா டெஸ்டில் ஏற்பட்ட கழுத்து வலி காரணமாகத் தொடரிலிருந்து விலகியுள்ளார். அதேபோல துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது ஏற்பட்ட மண்ணீரல் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால், அனுபவ வீரர் கே.எல்.ராகுல் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் ரோஹித் சர்மா 121* ரன்கள் எடுத்து சதமும், விராட் கோலி 74* ரன்கள் சேர்த்து அரைசதமும் விளாசி ஃபார்மில் இருந்தது அணிக்குக் கூடுதல் பலம்.
தோனி - கோலி சந்திப்பு இந்திய அணிக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். டெஸ்ட் தோல்வியிலிருந்து மீண்டு, தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இந்தியா வெற்றியுடன் கணக்கைத் தொடங்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.