சென்னை: 2026 ஐபிஎல் தொடருக்கான பயிற்சி முகாம் பணிகளைத் தொடங்குவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான எம்.எஸ். தோனி சென்னை வந்தடைந்துள்ளார். அவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய வீடியோவை சிஎஸ்கே அணி தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளது. இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வேகமாகப் பரவி வருகிறது.
வரவிருக்கும் 2026 ஐபிஎல் தொடருக்கான பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கவுள்ளது. இதற்காக 44 வயதான எம்.எஸ். தோனி பிப்ரவரி 28ஆம் தேதி சனிக்கிழமை சென்னை வந்தடைந்தார். மெரூன் நிற டி-சர்ட் அணிந்து மிகவும் பிட்டாக காணப்பட்ட தோனி, விமான நிலையத்திலிருந்து வெளியேறும் வீடியோவை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அவர் சென்னை வந்தபோது, அவரது டி-சர்ட்டில் இருந்த ரகசிய குறியீடு பேசுபொருளானது. ரசிகர்கள் அதனை இந்தத் தொடர் தான் கடைசி என்று கணித்தனர். ஆனால் இம்முறை எந்தவித குறியீடுகளும் இன்றி மிகவும் எளிமையான தோற்றத்தில் அவர் வந்துள்ளார். தோனியுடன் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட பிற வீரர்களும் சென்னை வந்துள்ளனர். மஞ்சள் நிற ஆடைகளை அணிந்த ரசிகர்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம் மார்ச் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. இந்த முகாமில் முதல் நாளில் இருந்தே தோனி முழுமையாகப் பங்கேற்பார் என சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக தோனி தனது பேட் மற்றும் உடற்பயிற்சி முறைகளில் சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளார். பொதுவாக தோனி 1.3 கிலோ வரையிலான அதிக எடையுள்ள பேட்டுகளைப் பயன்படுத்துவார். ஆனால், தற்போது அதிவேகப் பந்துவீச்சை எளிதாக எதிர்கொள்ளவும், கடைசி ஓவர்களில் பேட்டை வேகமாகச் சுழற்ற வசதியாகவும் தனது பேட்டின் எடையை 1.23 கிலோவாகக் குறைத்துள்ளார்.
44 வயதாகும் தோனி, தனது உடற்தகுதியைப் பராமரிக்கக் கடினமான ஓட்டப் பயிற்சிகளைத் தவிர்த்துவிட்டு, தினமும் 30 நிமிடம் நீச்சல் பயிற்சி மற்றும் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளில் மட்டும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். எனவே, தோனி இந்த முறை அதிக போட்டிகளில் பேட்டிங் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2025 ஐபிஎல் சீசனில் ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்பிடித்து மோசமான தோல்வியைச் சந்தித்தது. இந்த நிலையில், வரவிருக்கும் சீசனில் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் அந்த அணி களமிறங்குகிறது.
சிஎஸ்கே அணியை வலுப்படுத்தும் வகையில் சஞ்சு சாம்சன் போன்ற முன்னணி வீரரையும், பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா போன்ற திறமையான இளம் வீரர்களையும் சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இது அணிக்குப் புதிய பலத்தைக் கொடுத்துள்ளது. 2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் தோனியின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
