சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அனைத்து லீக் போட்டிகளையும் ஆடி முடித்து இருக்கும் நிலையில் தோனி மீண்டும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? அல்லது ஓய்வு பெறுவாரா? என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. இந்த நிலையில் நம்மை விரும்புபவர்களே நம்மை வெளியே செல்லுங்கள் என கூறும் அளவுக்கு இருக்கக் கூடாது என தோனியை சிஎஸ்கே அணியை விட்டு வெளியேறுமாறு கசூரி இருக்கிறார் முன்னாள் வீரர் முரளி கார்த்திக்.
ஐபிஎல் 2025 தொடரில் தோனி தனது வழக்கமான பேட்டிங்கை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரன்களை எடுக்கவும், ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யவும் சிரமப்பட்டார். 43 வயதான நிலையில் அவர் சிரமப்படுவதை பார்ப்பதே கடினமாக இருந்தது.

இந்த நிலையில் தோனியின் ஐபிஎல் எதிர்காலம் குறித்து, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் முரளி கார்த்திக் சில முக்கிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். "தோனியின் ஐபிஎல் பயணம் ஒரு முடிவுக்கு வர வேண்டிய நேரம் இது. சில விஷயங்கள் எவ்வளவுதான் பிடித்து இருந்தாலும் ஒரு நாள் அவை முடிவுக்கு வந்தே தீரும்" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், "சில சமயங்களில் நாம் விரும்புபவர்கள் கூட, 'நீங்கள் இங்கிருந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று சொல்லும் நிலை வரக்கூடாது. விராட் கோலி கூட 36 வயதில் இன்னும் சில ஆண்டுகள் ஆடலாம் என்று இருந்தும், அவரே விலகி விட்டார். ஆனால் தோனி என்ன நினைக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. அவரது மனதை கணிப்பது மிகவும் கடினம்" என்று கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025 சீசனின் நடுவில், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியதால், தோனி தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்றார். அடுத்த சீசனில் தோனி மீண்டும் கேப்டன் ஆவாரா என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த கார்த்திக், "கேப்டன் பொறுப்பு ருதுராஜுக்கு கொடுக்கப்பட்டது ஒரு தொடர்ச்சியான செயல்பாடாகும். அவர் அணியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, கேப்டன்சிக்கு பழகிக்கொள்ள நேரம் கொடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
"தோனி மீண்டும் வந்தாலும், கேப்டன் பொறுப்பை ருதுராஜிடம் இருந்து எடுத்து தோனியிடம் கொடுப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. கேப்டன் பொறுப்பு என்பது தோனியின் பெரிய காலணிகளுக்குள் நுழைவது போல. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த காலணிகளை (பாதையை) கண்டுபிடித்து, பொறுப்பில் இருக்கும்போதே கற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும். தோனியின் இடத்தைப் பிடிக்க மற்றவர்களை வற்புறுத்துவதை விட, அவர்கள் தங்கள் சொந்த பாதையை உருவாக்க அனுமதிக்க வேண்டும்" என்று முரளி கார்த்திக் மேலும் தெரிவித்தார்.