சென்னை: சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் அறிவுரையால் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர் பவர் பிளே ஓவர்களில் வார்னர் மற்றும் சால்ட் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர் பவர் பிளே ஓவர்களில் டேவிட் வார்னர் மற்றும் பிலிப் சால்ட் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிரடி வீரர்களான இருவரின் விக்கெட்டுகளை தொடக்க ஓவர்களிலேயே வீழ்த்தியது சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த இரு விக்கெட்டுகளும் வீழ்ந்ததற்கு தீபக் சஹர் தனது பந்துவீச்சில் வேகத்தை குறைத்ததே காரணமாக அமைந்தது. இருவருமே குறைந்த வேகத்தில் வீசப்பட்ட பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். இதுகுறித்து தீபக் சஹர் கூறுகையில், சேப்பாக்கம் பிட்ச்சில் நல்ல ஸ்விங் இருந்தது. அதேபோல் விக்கெட்டும் ஸ்லோவாக இருந்துள்ளது. இதனால் கேப்டன் எம்எஸ் தோனியிடம் சில ஆலோசனைகள் செய்தேன்.
அப்போது எம்எஸ் தோனி, பிட்ச் ஸ்லோவாக இருக்கும் போது, நாம் வேகமாக பந்துவீச தேவையில்லை. அதனால் வேகத்தை குறைத்து, ஸ்விங்கை சேர்க்க அறிவுறுத்தினார். அது பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடிப்பதற்கு கடினமாக இருக்கும் என்று தோனி கூறினார். அதன்படி பந்துவீசினே. அதற்கான பலன் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஸ்லோவாக பந்துவீசும் போது பேட்ஸ்மேன்கள் டவுன் தி டிராக் வந்து அடிக்காமல் இருக்க, தோனி ஸ்டம்புக்கு அருகிலேயே விக்கெட் கீப்பிங்கை மேற்கொண்டார்.

இது பேட்ஸ்மேன்களை அதீத அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் விக்கெட் ஸ்லோவாக மாறும் என்பதாலேயே முதலில் பேட்டிங் ஆடினோம். இந்த பிட்ச்சில் 165 ரன்கள் என்பதே நல்ல இலக்கு தான். பவர் பிளே ஓவர்கள் முக்கியமானதாக இருந்தது. அதில் சென்னை அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டோம்.
காயத்தில் இருந்து மீண்டு வருவது அவ்வளவு சாதாரணம் அல்ல. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் ஒரு வீரர் காயமடையும் போது, அவர் பூஜ்ஜியத்தில் இருந்து மீண்டும் தொடங்க வேண்டும். நான் இன்னும் 100 சதவீதம் முழுமையாக குணமடையவில்லை. ஆனால் அணிக்காக பங்களிக்க வேண்டும் என்று விரும்புவதால் விளையாடி வருகிறேன் என்று தெரிவித்தார்.