சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோனி அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.
சுரேஷ் ரெய்னாவின் நீண்ட கால சாதனையை முறியடித்து இருக்கிறார் தோனி. சுரேஷ் ரெய்னா 176 போட்டிகளில் 4687 ரன்கள் எடுத்திருந்தார். நீண்ட நாட்களாக அதுவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு வீரர் குவித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. அதை தற்போது தோனி முறியடித்திருக்கிறார். தோனி 236 போட்டிகளில் 4697 ரன்களை குவித்திருக்கிறார்.

இவர்கள் இருவருக்கும் அடுத்து மூன்றாவது இடத்தில் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் இருக்கிறார். அவர் 2721 ரன்களை சிஎஸ்கே அணிக்காக எடுத்திருக்கிறார். நான்காவது இடத்தில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இருக்கிறார். அவர் 2433 ரன்களை சேர்த்திருக்கிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஒன்பதாம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்தார். இதற்கு முன் ஒருமுறை மட்டுமே ஒன்பதாம் வரிசையில் அவர் பேட்டிங் செய்து இருக்கிறார். நேற்று இரண்டாவது முறையாக ஒன்பதாம் வரிசையில் இறங்கி அவர் 16 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார்.
இதற்கு முன் ஒன்பதாம் வரிசையில் களம் இறங்கிய போது தோனி ரன் ஏதும் எடுக்கவில்லை. தோனி ஐபிஎல் தொடரில் நான்காம் வரிசை மற்றும் ஐந்தாம் வரிசையில் அதிக ரன்களை சேர்த்திருக்கிறார். நான்காம் வரிசையில் 66 இன்னிங்ஸ்களில் 1559 ரன்களை சேர்த்திருக்கிறார். இதில் அவரது சராசரி 36.3 ஆகும்.
ஐந்தாம் வரிசையில் 73 இன்னிங்ஸ்களில் 1955 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதில் அவரது சராசரி 47.7 ஆகும். மேலும் இதிலேயே அவரது ஸ்ட்ரைக் ரேட் மிகவும் அபாரமாக உள்ளது, 144.5 என்பதாக உள்ளது. இதற்கு அடுத்து ஆறாம் வரிசையில் 48 இன்னிங்ஸ்களில் 961 ரன்களை எடுத்திருக்கிறார். இதில் அவரது சராசரி 33.1 ஆகும்.
தோனி சிஎஸ்கே அணிக்காக அதிக ரன் குவித்து சாதனை செய்த போதும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை சேர்த்தது.
அடுத்து பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி பத்து ஓவர்களுக்குள் நான்கு விக்கெட்களை இழந்தது. அதனால் ரன் குவிப்பு விகிதமும் வெகுவாக சரிவை சந்தித்தது. அதைத் தொடர்ந்து மற்ற பேட்ஸ்மேன்களாலும் அதிரடியாக ரன் குவிக்க முடியவில்லை. இதை அடுத்து சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.
தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் அவர் இரண்டு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். சிஎஸ்கே அணி இந்தப் போட்டியில் தோற்றாலும் தோனி ஆட்டம் அந்த அணியின் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.