
தொடரிலிருந்து வெளியேற்றம்
ஐபிஎல் 2020 சீசனில் சிஎஸ்கே அணி பிளே-ஆப் சுற்றிற்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் 12 புள்ளிகளை பெற்று கௌரவமாக தொடரிலிருந்து அந்த அணி வெளியேறியுள்ளது. நேற்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்
சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியும் இந்த சீசனில் தன்னுடைய சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தவில்லை. இதனால் சிஎஸ்கே மற்றும் தோனியின் ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். கடந்த ஒர் ஆண்டாக வலை பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டு வரும் தோனி ஐபிஎல் தொடரில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

400 ரன்களை குவிக்க ஆலோசனை
இந்நிலையில் அடுத்த ஐபிஎல் போட்டிகளில் 400 ரன்களை குவிக்க தோனி தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். நெட் பயிற்சிகளில் பங்கேற்றாலும், போட்டிகளில் பங்கேற்று விளையாடினால் மட்டுமே திறமையை தொடர்ந்து தக்க வைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்
இதே கருத்தை முன்னாள் இலங்கை கேப்டன் குமார சங்ககாராவும் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதன்மூலம் தன்னுடைய ஃபார்மை சிறப்பாக தோனி வைத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் மாதம் வரையில் ரஞ்சிப் போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக கங்குலி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











