மும்பை: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமை தோனிக்கு மட்டுமே உண்டு. அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு திடீரென தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்து, விராட் கோலிக்கு வழிவிட்டார். அப்போது அது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இந்நிலையில், அப்போது தோனி எப்படி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்? அதற்குப் பின்னால் நடந்தது என்ன? என்பது குறித்து முன்னாள் தேர்வாளர் ஜத்தின் பரஞ்சபே தற்போது மனம் திறந்துள்ளார்.

2014 ஆம் ஆண்டே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கேப்டனாகச் செயல்பட்டு வந்தார். 2015 உலகக்கோப்பை மற்றும் 2016 டி20 உலகக்கோப்பை ஆகியவற்றில் இந்தியா அரையிறுதி வரை சென்றாலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதேவேளையில் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி மிகச்சிறப்பாக அணியை வழிநடத்தி வந்தார்.
2019 உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெறவிருந்த நிலையில், விராட் கோலிக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் (ஒருநாள் மற்றும் டி20) கேப்டன் பொறுப்பை வழங்கத் தேர்வாளர்கள் முடிவு செய்தனர். ஆனால் இதை எப்படி தோனியிடம் சொல்வது என்ற தயக்கம் அவர்களுக்கு இருந்தது.
இதுகுறித்து ஜத்தின் பரஞ்சபே கூறுகையில், "அன்று தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். நானும் அப்போதைய தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் அவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். இந்த விஷயத்தை எப்படித் தோனியிடம் மிகவும் மரியாதையாகக் கொண்டு செல்வது என்று தயங்கினோம்."
"கடைசியில் அவரிடம் சென்றோம். 'மகி.. கேப்டன் பொறுப்பை அடுத்தவரிடம் ஒப்படைத்துவிட்டு, நீங்கள் அடுத்தகட்டத்திற்கு நகர இதுவே சரியான நேரம் என்று நாங்கள் நினைக்கிறோம்' என்று கூறினோம்."
நாங்கள் அப்படிச் சொன்னதும் தோனி கொஞ்சமும் முகம் சுளிக்கவில்லை. எம்எஸ்கே பிரசாத்தைப் பார்த்து, "அண்ணா.. இது மிகச்சரியான முடிவு. நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்" என்று மிக இயல்பாகக் கூறினார். அதற்கு எம்எஸ்கே பிரசாத், "நீங்கள் பதவி விலகுவதை எழுத்துப்பூர்வமாக எங்களுக்குத் தர வேண்டும். அப்போதுதான் நாங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும்" என்றார். தோனியும் அதற்கு உடனே சம்மதித்தார்.
"நாங்கள் பேசி முடித்த அன்றைய தினம் நள்ளிரவே தோனியிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், 'நான் கேப்டன் பதவியில் இருந்து விலக விரும்புகிறேன்' என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படித்தான் அந்த முடிவு அதிகாரப்பூர்வமானதாக மாறியது" என்று பரஞ்சபே விவரித்தார்.
இதன் பிறகே விராட் கோலி முழுநேர கேப்டனாகப் பொறுப்பேற்றார். கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும், அணியில் ஒரு மூத்த வீரராகத் தொடர்ந்து நீடித்த தோனி, 2 விராட் கோலிக்குத் தக்க ஆலோசனைகளை வழங்கி 2019 உலகக்கோப்பை வரை அணியை வழிநடத்தினார். கடினமான முடிவாக இருந்தாலும், அணியின் நலன் கருதி அதைத் தேர்வாளர்கள் எடுத்ததாகவும், அதைத் தோனி பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டதாகவும் ஜத்தின் பரஞ்சபே தெரிவித்துள்ளார்.