மும்பை: முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி, தோனி பற்றி சமீபத்தில் சில மோசமான விஷயங்களை பேசி இருந்தார். தற்போது அதன் தொடர்ச்சியாக இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் இருப்பதை பார்த்த வீரேந்தர் சேவாக் செய்த தியாகம் ஒன்றைப் பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார்.
மனோஜ் திவாரி இந்திய அணியில் இடம் பெற்ற போதும் அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. அவர் தொடர்ந்து பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெறவில்லை. 2011 இல் ஒரு முறை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கவுதம் கம்பீர் தற்காலிக கேப்டனாக இருந்தபோது வீரேந்தர் சேவாக் இருஇரட்டை சதம் அடித்து இருந்தார். ஆனால், அடுத்த போட்டியில் தனது இடத்தை மனோஜ் திவாரிக்காக விட்டுக் கொடுத்து இருக்கிறார். அது பற்றி மனோஜ் திவாரி விவரித்தார்.

"வீரேந்தர் சேவாக் தான் எனது முன்மாதிரி கிரிக்கெட் வீரர். எனது கடைசி மூச்சு இருக்கும் வரை நான் அவருக்கு கடமைப்பட்டு இருக்கிறேன். அவர் எனக்காக தனது இடத்தை விட்டுக் கொடுக்கவில்லை என்றால் எனது வாழ்க்கை வேறு மாதிரியாக இருந்திருக்கும். வீரேந்தர் சேவாக், கவுதம் கம்பீர் மற்றும் நான் அப்போது நல்ல புரிதலுடன் இருந்தோம்."
"நான் ஏழு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெற்று உள்ளேயும், வெளியேயும் சென்று கொண்டு இருந்தேன். பேட்டிங் வரிசையில் நான் மேலும், கீழும் பேட்டிங் செய்து வருவதையும் எனக்கு சரியான வாய்ப்புகள் அளிக்கப்படாமல் இருப்பதையும் வீரேந்தர் சேவாக் பார்த்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு தொடரில் நான் திடீரென துவக்க வீரராக ஆட வைக்கப்பட்டேன். அதன் பின் ஐந்தாம் வரிசையில் ஆடினேன். எனக்கு அநீதி நிகழ்ந்தது."
"அப்போது ஒரு முறை இந்தூரில் வீரந்தர் சேவாக் இரட்டை சதம் அடித்தார். அந்தத் தொடரில் அவர் ஒரு போட்டியில் விலகி விட்டு கவுதம் கம்பீரிடம் என்னை ஆட வைக்க வேண்டும் என்று கூறினார். நான்காம் வரிசையில் நான் அப்போது விளையாடினேன். அப்போது சேவாக் என்னிடம், "எந்த இடத்தில் நீ பேட்டிங் செய்ய விரும்புகிறாய்?" என்று கேட்டார்."
"நான் நாட்டுக்காக விளையாடினால் போதும் என்று கூறினேன். ஆனால், அவர் சரியாக சொல் என்றார். நான் எப்போதும் நான்காம் வரிசையில் தான் பேட்டிங் செய்து இருக்கிறேன் என்று கூறினேன். அப்போது எனக்கு சாதகமாக சில விஷயங்கள் நடந்தன. அதை அதிர்ஷ்டம் என்று நான் நினைக்கிறேன். அந்தப் போட்டியில் முதல் மூன்று பந்துகளில் இந்திய அணி இரண்டு விக்கெட்களை இழந்தது."
தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் நடந்த சம்பவங்களை மனோஜ் திவாரி விவரித்தார். "ரஹானே மற்றும் பார்த்திவ் பட்டேல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அப்போது நான் பேட்டிங் செய்த போது மனதில் எதையும் நிறுத்திக் கொள்ளாமல் சென்றேன். அப்போது நல்ல விஷயங்கள் நடந்தன."
"இவை அனைத்தும் எனது விதியில் எழுதப்பட்டு இருந்தது. நான் அப்போது சதம் அடித்தேன். எனக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போதுதான் நான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு உரியவன் என்று நினைத்தேன். சேவாக் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தார்." இவ்வாறு மனோஜ் திவாரி சேவாக் தனக்காக செய்த உதவி பற்றி கூறி இருக்கிறார்.
இதே பேட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாத போதும் கேப்டன் தோனி வாய்ப்பு அளித்ததாகவும், ஆனால், தான் சதம் அடித்த பின் 14 போட்டிகளில் வாய்ப்பு பெறாமல் இருந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் மனோஜ் திவாரி.