அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக வென்று சாதனை படைத்திருக்கிறது. தோனிக்கு தற்போது 41 வயது ஆகிவிட்டது. இதுவே அவருடைய கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் பலரும் தோனி கோப்பையில் வெல்ல வேண்டும் என ஆசைப்பட்டனர். இந்த நிலையில் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றியின் பக்கத்தில் இருந்த நிலையில் தோனி டக்அவுட் ஆகி வெளியேறினார்.

இதன் மூலம் சிஎஸ்கேவில் வெற்றி வாய்ப்பு வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் பெவிலியன் நோக்கி தோனி கனத்த முகம் மற்றும் இதயத்துடன் சென்றார். அதன் பிறகு சோகமான முகத்தை வைத்துக்கொண்டு கடைசி ஓவரை தோனி பார்த்தார். குறிப்பாக மோகித் சர்மா வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி முதல் நான்கு பந்தில் மூன்று ரன்கள் மட்டுமே அடித்தது .இதனால் இரண்டு பந்துக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது இது கடினமான காரியம் என்றும் தம்மால் நின்று அணிக்காக வெற்றியை பெற்று தர முடியவில்லை என்ற சோகத்தில் தோனி கண்களில் கண்ணீர் தேங்கி கொண்டிருந்தது.
மேலும் கடைசி இரண்டு பந்துகளையும் தோனி பார்க்காமல் தலையை கீழே குனிந்து கொண்டு அமர்ந்திருந்தார். அப்போது ஐந்தாவது பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடித்தும் கடைசி பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்தும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. சிஎஸ்கே ஜெயித்து விட்டது என்பது கூட தெரியாமல் தோனி தலையை குனிந்தபடியே இருந்தார்.
அதன் பிறகு மற்றவர்கள் அவரிடம் உற்சாகமாக கட்டி அணைத்த பிறகே சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது அவருக்கு தெரியும். இதனை அடுத்து மகிழ்ச்சியில் திளைத்த தோனி ஜடேஜாவை கட்டிப்பிடித்து தூக்கி கொண்டாடினார். தோனியின் முகத்தில் அந்த சிரிப்பை பார்த்தவுடன் ரசிகர்கள் மனதும் உற்சாகத்தில் பொங்கியது. ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகர்களுக்கும் இந்த காட்சிகள் மனதில் நீங்காமல் வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.