மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி அணிக்காக பேட்டிங்கையும், ரன்களையும் தியாகம் எல்லாம் செய்துள்ளார் என்ற கவுதம் கம்பீரின் பேச்சுக்கு ஸ்ரீசாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.
அண்மையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், ஒருநாள் கிரிக்கெட்டில் ஆட்டத்தின் திசையையே மாற்றக் கூடிய திறமை பெற்றிருந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எம்எஸ் தோனி தான். அவரை போன்ற திறமை வாய்ந்த பவர் ஹிட்டங் கொண்ட ஒரு வீரர் இந்திய அணிக்கு கிடைத்தது மிகப்பெரிய வரம். தோனி தொடக்க காலத்தை போல் டாப் ஆர்டரில் களமிறங்கி இருந்தால், கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்திருப்பார்.

ஆனால் இந்திய அணியின் கேப்டன்சி அவருக்கு கோப்பையை வெல்ல வேண்டிய பொறுப்பை கொடுத்துவிட்டது. அதற்காக தனது பேட்டிங் ஆர்டரை கீழ் வரிசையில் மாற்றிக் கொண்டார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், 6 மற்றும் 7 ஆகிய பேட்டிங் வரிசையில் விளையாடி தோனி இந்திய அணிக்காக மிகப்பெரிய தியாகத்தை செய்துள்ளார். கேப்டனாக தோனி செய்த சாதனைகளை மக்கள் அதிகமாக பேசுவார்கள். ஆனால் கேப்டன்சியை ஏற்றுக் கொண்டதால், தோனி தன்னுள் இருந்த பேட்ஸ்மேனை தியாகம் செய்துள்ளார்.
ஆனால் கேப்டனாக இருக்கும் போது தன்னலமின்றி அணியை முன்னிறுத்த வேண்டும். ஒருவேளை தோனி கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால், இன்னும் அதிக ரன்களையும் சதங்களையும் விளாசி இருப்பார் என்று பேசி இருந்தார். இது தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையாகவே கவுதம் கம்பீர் தான் இப்படி பேசுகிறாரா என்று தல தோனி ரசிகர்கள் பரிசோதனையெல்லாம் செய்ய வேண்டிய நிலை வந்தது.
இந்த நிலையில் கவுதம் கம்பீர் பேச்சுக்கு முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் பதில் கொடுத்துள்ளார். அதில், கேப்டன்சி பொறுப்பு காரணமாக தோனி தனது பேட்டிங்கையும், நம்பர் 3 வரிசையையும் தியாகம் செய்ததாக கம்பீர் கூறி இருக்கிறார். ஆனால் தோனி எந்த தியாகத்தையும் செய்யவில்லை. அவரை பொறுத்தவரை அதிக ரன்கள் சேர்ப்பதை விடவும், அதிக வெற்றிகளை குவிக்க வேண்டும் என்பது தான் ஆசையாக இருந்தது.
எப்போதெல்லாம் அணிக்கு தேவையோ, அப்போதெல்லாம் ஃபினிஷிங் களமிறங்கி வெற்றிபெற வைத்தார். அவரால் ஒவ்வொரு வீரரிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டு வர முடிந்தது. ஒவ்வொரு வீரரின் திறமைக்கேற்ப பேட்டிங் பொசிஷனை அளித்தார். தோனியை பொறுத்தவரை அணி தான் முதலில் இருக்கும். அதன்பின் தான் சொந்த சாதனையை பார்ப்பார் என்று தெரிவித்துள்ளார்.