இஸ்லாமாபாத்: பயம் என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்றே டோணிக்கு தெரியாது, என்று பாராட்டியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 14ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பதினைந்தாம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. 1992க்கு பிறகுதான் இவ்விரு அணிகளும் உலக கோப்பை போட்டிகளில் மோதும் வாய்ப்பை பெற்றன. ஆனால் அனைத்து போட்டியிலும், இந்தியாதான் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், உலகிலேயே அதிவேகமாக பந்து வீசிய (100.2 மைல்) சாதனைக்கு சொந்தக்காரருமான சோயிப் அக்தர் இந்திய அணி குறித்து கூறியதாவது:
இந்திய கிரிக்கெட் கேப்டன் டோணிக்கு அச்சம் என்றால் என்னவென்றே தெரியாது. பிற கேப்டன்கள் மீது உள்ள மரியாதையால் அவர்கள் பெயரை நான் சொல்ல மாட்டேன், ஆனால் இக்கட்டான நேரத்தில் பதுங்கும் நிறைய கேப்டன்களை நான் பார்த்துள்ளேன்.
டோணியை பொறுத்தளவில், இக்கட்டான நேரத்தில் தானே முன்நின்று பொறுப்பை ஏற்றுக் கொள்வார். பல கேப்டன்களும், அணியை முன்னுக்கு தள்ளிவிட்டு தாங்கள் பின்னால் சென்று ஒழிந்து கொள்வார்கள்.
உலக கோப்பை தொடரை பொறுத்தளவில் கடைசி இரு வாரங்கள்தான் முக்கியம். 1999 உலக கோப்பைக்கு முன்பு வரை, ஆஸ்திரேலிய அணி தொடர் தோல்விகளால் துவண்டு வந்தது. உலக கோப்பையில் சிறப்பாக எழுச்சியடைந்து கோப்பையை கைப்பற்றியது. இவ்வாறு அக்தர் தெரிவித்தார்.