ராஞ்சி: சர்வதேச கிரிக்கெட்டை தொடங்கும் போது உத்தப்பாவின் மனைவியிடம் தோனி, எனது வாழ்க்கைக்கு தேவையான ரூ.25 முதல் ரூ.30 லட்சம் வரை சம்பாதித்துவிட்டால் என் சொந்த ஊருக்கே சென்று செட்டிலாகிவிடுவேன் என்று கூறியதாக சில நாட்களுக்கு முன் தெரிய வந்தது.
ஆனால் சச்சினுக்கு பின் இந்திய கிரிக்கெட் மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட்டின் முகமாகவும் தோனி மாறினார். அதன் மூலம் கிடைத்த புகழ் காரணமாக கிடைத்த விளம்பரங்கள், ஒப்பந்தங்கள், தொழில்கள் என்று இன்று ஒரு சாம்ராஜ்ஜியத்தையே தோனி உருவாக்கியுள்ளார். சுமார் ரூ.1,040 கோடி சொத்துகள் தோனிக்கு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதேபோல் கிரிக்கெட்டை கடந்து பைக் மற்றும் கார்கள் மீது தோனிக்கு அளவுக்கடந்த ஆர்வம் உள்ளது. அதேபோல் பேட்மிண்டன் விளையாட்டின் மீதும் தோனி அதிக ஆர்வம் கொண்டவர். அண்மையில் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தோனியின் வீட்டிற்கு சென்ற வெங்கடேஷ் பிரசாத், அவரின் கராஜில் நின்றிருந்த 10க்கும் மேற்பட்ட கார்களையும், 50க்கும் அதிகமான பைக்களையும் பார்த்து மிரண்டே போனார்.
அதன் வீடியோவை வெளியிட்டு, ஒரு மனிதனால் எப்படி இவ்வளவு ஆர்வத்துடன் இத்தனை பைக்குகளை வாங்கி பராமரிக்க முடிகிறது என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். பொதுவாக இந்த பைக்குகளையும், கார்களையும் தோனி அடிக்கடி வெளியில் கொண்டு வரவில்லை என்றாலும், சில நேரங்களில் ராஞ்சி சாலைகளில் ஜாலியாக வலம் வருவார். இது அவ்வப்போது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் தோனி தனது 1980 மாடல் ரோல்ஸ் ராய்ஸ் காரில் ராஞ்சியின் முக்கியமான சாலைகளில் ஓட்டி சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் சிலர், தோனியின் பின்னால் சென்று அவரை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த பழமையான காரை கூட தோனி விட்டு வைக்காமல் வாங்கி தனது கராஜில் வைத்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
1981ஆம் ஆண்டில் பிறந்த தோனிக்கு ஏன் 1980 மாடல் ரோல்ஸ் ராய்ஸ் கார் மீது இவ்வளவு பிரியம் என்றும், இதனை எப்படி எந்த ஏலத்தில் தோனி வாங்கினார் என்று ரசிகர்களிடையே விவாதம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற தோனி, எந்த டென்ஷனும் இல்லாமல் சொந்த ஊரில் தன் விருப்பப்படி வாழ்ந்து வருவது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.