MS Dhoni: விடைபெற்ற தோனி.. முடிவில் குரூப் போட்டோ.. ஓய்வு பெற்றுவிட்டதாக நினைத்து ரசிகர்கள் வேதனை
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டம், தோனியின் உணர்ச்சிப்பூர்வமான பிரியாவிடை நிகழ்வாக மாறியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் சென்னை அணி தோல்வியடைந்த போதிலும், மைதானத்தை விட்டு ரசிகர்கள் நகரவில்லை. காரணம், 'தல' தோனி மஞ்சள் சீருடையில் சேப்பாக்கம் மைதானத்தை ஒருமுறை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதுவே அவரது கடைசிப் போட்டியாக இருக்குமோ என்ற அச்சத்தில் ரசிகர்கள் கண்ணீர் மல்க அவருக்கு விடை கொடுத்தனர்.
தோனியின் உணர்ச்சிகரமான தருணங்கள்
நேற்றைய போட்டியில் காயம் காரணமாக தோனி விளையாடவில்லை. இருப்பினும், இன்னிங்ஸ் இடைவேளையின் போது ஒட்டுமொத்த சிஎஸ்கே வீரர்களுடன் இணைந்து தோனி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். போட்டி முடிந்த பிறகு, மைதானத்தின் எல்லைக்கோடு அருகே மெதுவாக நடந்து சென்று ரசிகர்களை நோக்கி அவர் கையசைத்தார்.
இளம் வீரர்கள் ரசிகர்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கொண்டிருக்க, தோனி மட்டும் மிகவும் அமைதியாக ரசிகர்களின் அன்பை ஏற்றுக்கொண்டார். சேப்பாக்கத்தில் தோனியின் ஒவ்வொரு அசைவும் கடந்த 20 ஆண்டுகளாக ஒரு கொண்டாட்டமாக இருந்து வந்துள்ளது. ஆனால் நேற்று நிலவிய அமைதி ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

வழக்கமாக தோனி என்றால் கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பது அல்லது மின்னல் வேக ஸ்டம்பிங் செய்வது என ஒரு அதிரடி இருக்கும். ஆனால், நேற்று ஒரு வீரராக அவர் களம் இறங்கவில்லை. சிஎஸ்கே-வின் மஞ்சள் உடையில் அவர் மெதுவாக மைதானத்தைச் சுற்றி வந்த அந்தத் தருணம், 20 ஆண்டுகால பந்தத்திற்கு ஒரு சத்தமில்லாத முற்றுப்புள்ளியாக இருக்குமோ என்று ரசிகர்கள் வேதனைப்பட்டனர். மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் 'தோனி... தோனி...' என முழக்கமிட்டுத் தங்களது பாசத்தை வெளிப்படுத்தினர். தோனி ஓய்வு பெறப் போவதாக கூறவில்லை என்றாலும் அவரது இந்த செயல்கள் அதைத்தான் குறிக்கிறதோ? என ரசிகர்கள் நினைத்தனர்.
ரெய்னா - தோனி உரையாடல்
முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, தோனியிடம் இது குறித்து முன்பு பேசியபோது, "இந்த 2026 சீசன் ஒரு மிஸ்டு கால் போன்றது, அடுத்த ஆண்டு நீங்கள் மீண்டும் வரவேண்டும்" என்று கேட்டார். அதற்கு தோனி, "பார்க்கலாம்" என்று மட்டும் சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளார். தோனியின் இந்த மர்மமான பதில் ரசிகர்களுக்கு ஒரு சிறிய நம்பிக்கையை அளித்துள்ளது. எனினும், 44 வயதாகும் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகமே.
பிளே-ஆப் வாய்ப்பு
ஒருபுறம் தோனியின் ஓய்வு குறித்த கவலை இருந்தாலும், மறுபுறம் சிஎஸ்கே அணியின் பிளே-ஆப் வாய்ப்பு நூலிழையில் உள்ளது. 181 ரன்கள் என்ற இலக்கை ஹைதராபாத் அணி 19 ஓவர்களில் எட்டியதால், சென்னை அணி இப்போது 12 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. அகமதாபாத்தில் நடக்கும் அடுத்த போட்டியில் வென்றால் மட்டுமே சிஎஸ்கே-வுக்கு வாய்ப்பு உண்டு.


Click it and Unblock the Notifications
