சிஎஸ்கே அணியில் தோனிக்கு முக்கிய பதவி.. லண்டனில் வேலையை ஆரம்பித்தார்.. பிளெமிங் விலகிய பின் முடிவு
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் பிளெமிங் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, தோனிக்கு அணியில் புதிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2027 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சிஎஸ்கே அணியின் கிரிக்கெட் சார்ந்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரமும் அவரிடமே ஒப்படைக்கப்பட உள்ளது. 2026 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. தற்போது 45 வயதாகும் நிலையில் இனி அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பிளெமிங்கிற்குப் பதிலாக புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்வதன் மூலம் தோனி சிஎஸ்கே அணியின் ஆலோசகராக தனது பணியை தொடங்க உள்ளார். தற்போது லண்டனில் இருக்கும் தோனி, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பர்மிங்காமில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியை நேரில் கண்டு ரசித்தார்.
இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் தொடருக்காக முகாமிட்டு இருக்கும் சில பயிற்சியாளர்களை தோனி சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் தான் சிஎஸ்கே பயிற்சியாளரராக நியமிக்கப்படுவார் என்ற தகவலும் உள்ளது.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஹேமங் பதானி சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் பல்வேறு டி20 லீக் தொடர்களில் பயிற்சியாளராக பல கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.
ஆனால், அவரது பயிற்சியின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோசமாக செயல்பட்டு வருகிறது. எனவே, அவரை பயிற்சியாளராக நியமிக்கக் கூடாது என சிஎஸ்கே ரசிகர்களே கூறி வருகின்றனர். இது தொடர்பான முடிவு எடுக்கும் அதிகாரம் தோனி வசம் அளிக்கப்பட்டால் அவர் யாரை தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
சிலர் ராகுல் டிராவிட் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக வருவர் எனக் கூறுகிறார்கள். 2026 ஐபிஎல் தொடருக்கு முன் ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். அதன்பின் அவர் எந்த பயிற்சியாளர் பொறுப்பையும் வகிக்கவில்லை. எனவே, அவர் சிஎஸ்கே அணிக்கு வரவும் வாய்ப்பு உள்ளது.
ராகுல் டிராவிட் தனது துவக்க காலத்தில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர் பெற்று விளையாடி இருக்கிறார். மேலும், அதே நிறுவனத்தில் அவர் கவுரவ பதவியிலும் இருந்தார். எனவே, ராகுல் டிராவிட் இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பை வென்று கொடுத்த பயிற்சியாளர், பேட்டிங் ஜாம்பவான் என்பதோடு சிஎஸ்கே நிர்வாகத்துக்கு நெருக்கமானவர் என்ற அடிப்படையில் சிஎஸ்கே பயிற்சியாளராக வர வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications
