ரயில்வே முதல் உலகக் கோப்பை வரை.. தோனியின் 45-வது பிறந்தநாளில் ஒரு வரலாற்றுப் பயணம்!
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த மற்றும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி இன்று (ஜூலை 7) தனது 45-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ராஞ்சியிலிருந்து வந்து இந்திய கிரிக்கெட்டின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய இந்த ஜாம்பவானின் ஆரம்பகாலப் பயணம் அத்தனை எளிதானதாக இருக்கவில்லை.
பீகாரின் ஒரு பகுதியாக இருந்த ராஞ்சியில் 1981 ஜூலை 7 அன்று பிறந்த தோனிக்கு ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டின் மீதுதான் அதீத ஆர்வம் இருந்தது. ஒரு சிறந்த கோல்கீப்பராக விளங்கிய அவரது சுறுசுறுப்பான செயல்பாடுகளைக் கண்ட பள்ளி பயிற்சியாளர், அவரை விக்கெட் கீப்பராக முயற்சி செய்ய ஊக்குவித்தார். இந்த ஒரு முடிவு அவரது வாழ்க்கையையே மாற்றியமைத்தது. 1999-2000 ரஞ்சி கோப்பை தொடரில் பீகார் அணிக்காக அறிமுகமாகி உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

அவரது வாழ்க்கையின் மிக சவாலான காலம் 2001 முதல் 2003 வரை அமைந்தது. இந்த காலகட்டத்தில் மேற்கு வங்கத்தின் கரக்பூர் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதகராக (டிடிஇ) தோனி பணியாற்றினார். ரயில்வேயில் கடினமான வேலை நேரங்களுக்கு மத்தியிலும், கிரிக்கெட் பயிற்சியைத் தோனி கைவிடவில்லை. அரசு வேலையின் பாதுகாப்பை விட, இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற அவரது கனவு மட்டுமே அவரது மனதில் இருந்தது.
அவரது விடாமுயற்சிக்கு 2003-04 உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பலன் கிடைத்தது. அவரது அதிரடியான பேட்டிங் மற்றும் பயமில்லாத கீப்பிங் தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து 2003-04 சீசனில் கென்யா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளுக்குப் பயணம் செய்த இந்தியா ஏ அணியில் தோனிக்கு இடம் கிடைத்தது. அங்கு பல சர்வதேச பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடி காட்டி ரன்களைக் குவித்து அசத்தினார்.
இதன் பலனாக, 2004 டிசம்பர் 23 அன்று வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோனி தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார். துரதிர்ஷ்டவசமாக அவரது முதல் போட்டி ரன்-அவுட் மூலம் டக்-அவுட்டில் முடிந்தது. ஆனால், அதன் பிறகு விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் விளாசிய அதிரடி 148 ரன்கள், உலகிற்கு ஒரு புதிய ஜாம்பவான் பிறந்துவிட்டதை உரக்கச் சொன்னது.
எந்தவொரு பின்னணியும் இன்றி, தனது சொந்த உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் மட்டுமே உயர்ந்த தோனி, பின்னர் இந்திய அணியை 3 ஐசிசி கோப்பைகளை வெல்ல வழிநடத்தினார். அவரது கரக்பூர் ரயில்வே வேலை, உள்நாட்டுப் போட்டிகளின் போராட்டங்கள் ஆகியவை தான் அவரை பிற்காலத்தில் 'கேப்டன் கூல்' ஆகவும், இக்கட்டான சூழ்நிலைகளிலும் அமைதியாகச் செயல்படும் கேப்டனாகவும் செதுக்கின. ஹெலிகாப்டர் ஷாட்கள் மற்றும் இமாலய சாதனைகளுக்குப் பின்னால் இருந்த அந்த ராஞ்சி இளைஞனின் விடாமுயற்சி என்றென்றும் கிரிக்கெட் வரலாற்றில் அழியாத காவியமாக நிலைத்திருக்கும்.


Click it and Unblock the Notifications

