சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக சமீபத்தில் நியமிக்கப்பட்டிருக்கும் தோனிக்கு மீண்டும் முழங்காலில் காயம் ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த ஆண்டு அதுவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டாவது வெற்றியாகும்.
இதற்கு முன் ஐந்து லீக் போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அந்த வெற்றி ஆறுதல் அளித்தது. ஒரு பக்கம் இந்த வெற்றி மகிழ்ச்சி அளித்த நிலையில், மறுபக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மீண்டும் முழங்கால் பிரச்சனையில் சிக்கி இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனியால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியவில்லை. அவர் ஒவ்வொரு முறை பேட்டிங் செய்து முடித்த பிறகும் காலில் ஐஸ் பேக்கை வைத்துக் கொண்டு, நடக்க முடியாமல் சிரமத்தை அனுபவித்து வந்தார் தோனி. இந்த ஆண்டு முதல் ஆறு போட்டிகளில் அது போன்ற நிலை எதுவும் இல்லை. தோனி நன்றாகவே நடந்தார், பேட்டிங் செய்தார், விக்கெட் கீப்பிங் செய்தார்.
ஆனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு அவர் நடக்க முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டார். அந்தப் போட்டியின் முடிவில் அவர் ஓய்வறைக்கு செல்லும் போதும், அதன் பிறகு ஆட்டநாயகன் விருதை வாங்க நடந்து வரும்போதும் அவரால் சரியாக நடக்க முடியவில்லை. ஒரு காலை தாங்கியப்படியே நடந்தார்.
அதன் பிறகு ஹோட்டல் அறைக்கு செல்லும்போதும் அவர் அதேபோல நடந்து சென்றார். இதை அடுத்து அவருக்கு மீண்டும் முழங்கால் பிரச்சனை பெரிதாகி விட்டதாக ரசிகர்கள் கவலை அடைந்து உள்ளனர். இனிவரும் போட்டிகளில் தோனியால் முழு உடல் தகுதியோடு விளையாட முடியுமா? அவரால் அதிக வேகத்தில் ரன் ஓட முடியுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இது குறித்து சிஎஸ்கே வட்டாரத்திலிருந்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இப்போதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இரண்டாவது வெற்றியை பெற்று இருக்கிறது. இனி அனைத்து போட்டிகளிலும் வென்றால் தான் பிளே ஆஃப் பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் நினைத்துப் பார்க்க முடியும். இந்த இக்கட்டான நிலையில் கேப்டன் தோனி மீண்டும் காயமடைந்து இருப்பது அந்த அணிக்கு சிக்கலை அதிகரித்து உள்ளது.
தோனியால் இனி தொடர்ந்து விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை காயத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2024-லேயே தோனி தனது கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அளித்து விட்டார். அப்போது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வந்தார்.
2025 ஐபிஎல் தொடரின் முதல் ஐந்து போட்டிகள் வரை அவரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்தார். ஆனால் முழங்கையில் ஏற்பட்ட காயம் பெரிதானதை அடுத்து அவர் 2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார், கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக தோனி கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டார். 2023 ஐபிஎல் இறுதிப் போட்டிக்குப் பிறகு தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக செயல்பட்டார். ருதுராஜ் நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக 17 வயது மும்பை வீரர் ஆயுஷ் மாத்ரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்து இருக்கிறார்.
தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி அளித்திருந்தது. மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அந்த இலக்கை 10.1 ஓவரிலேயே எட்டி அதிரடியாக வெற்றி பெற்றது.
அதன் பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடியது. அந்த போட்டியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அந்த இலக்கை சேசிங் செய்யாது என பலரும் நினைத்த நிலையில் தோனியின் அதிரடியால் சிஎஸ்கே அந்த போட்டியில் வெற்றி பெற்றது.
தோனி கடைசி நேரத்தில் 11 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதை அடுத்து சிஎஸ்கே அணி மீண்டுவிட்டது, இனி எல்லாம் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில்தான் தோனியின் முழங்கால் காயம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
அவர் வலியுடன் நடக்க முடியாமல் தாங்கி, தாங்கி நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதை பகிர்ந்து வரும் ரசிகர்கள் சிஎஸ்கே அணி இனி என்ன செய்யும், தோனி விளையாடுவாரா? என விவாதித்து வருகின்றனர். கடந்த ஆண்டு தோனி முழங்கால் வலியுடன் முழு ஐபிஎல் தொடரிலும் விளையாடினார். அதேபோல இந்த ஆண்டும் அவர் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால், அவரது முழங்கால் வலி எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பொறுத்து தோனி தொடர்ந்து விளையாடுவாரா? அல்லது விலகுவாரா? என்பது தெரிய வரும். .
ஐபிஎல் 2025 சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு: ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அஹ்மது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, தீபக் ஹூடா, மதீஷா பதிரானா, கமலேஷ் நாகர்கோட்டி, ஷேக் ரஷீத், ஜேமி ஓவர்டன், ஸ்ரேயாஸ் கோபால், சாம் கரன், முகேஷ் சௌத்ரி, நேதன் எல்லிஸ், குர்ஜப்னீத் சிங், ராமகிருஷ்ணா கோஷ், ஆந்த்ரே சித்தார்த் சி, ஆயுஷ் மாத்ரே மற்றும் வன்ஷ் பேடி ஆகியோர் அடங்குவர்.