மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளரான கவுதம் கம்பீர், எதிர்காலத்தில் எம்எஸ் தோனி இந்திய அணியின் பயிற்சியாளராக வர வேண்டும் என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் இடையே பனிப்போர் இருப்பதாக பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில், தோனி கம்பீரின் சிரிப்பை குறிப்பிட்டு ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார். அதற்கு கம்பீர் பதில் அளித்து, தோனி அதே போல பயிற்சியாளராக இருந்து வெற்றிகளை பெற வேண்டும் என கூறி இருக்கிறார்.
சமீபத்தில் இந்திய அணி 2026 டி20 உலகக்கோப்பையை வென்றபோது, கவுதம் கம்பீர் சிரிப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என எம்எஸ் தோனி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். திங்கட்கிழமை நடைபெற்ற ரெவ்ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் இதுகுறித்து கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த கம்பீர், உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் வந்து பார்த்ததற்காக தோனிக்கு நன்றி. நான் சிரிக்க வேண்டும் என அவர் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் ஒரு நாள் அவர் எனது இடத்தில் பயிற்சியாளராக இருக்க வேண்டும், அப்போது நான் இதேபோன்று அவருக்கு வாழ்த்துச் செய்தியை எழுத வேண்டும். அவர் வெற்றியை பார்த்து சிரிப்பதை நான் பார்க்க வேண்டும் என கம்பீர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
கடந்த காலங்களில் வர்ணனையாளராக இருந்தபோது தோனியின் புகழ் குறித்து கம்பீர் தொடர்ந்து விமர்சித்து வந்ததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக ரசிகர்கள் கருதி வந்தனர். ஆனால் 2024 ஆம் ஆண்டு பயிற்சியாளராக பதவியேற்ற பிறகு, தற்போது இருவருக்கும் இடையிலான இந்த ஆரோக்கியமான நட்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் கம்பீர் அசைக்க முடியாத இடத்தில் உள்ளார். 2 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே இந்திய பயிற்சியாளர் என்ற பெருமையை பெற்றுள்ள அவர், 2027 ஒருநாள் உலகக்கோப்பைய வரையிலும் பதவியில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம், எம்எஸ் தோனிக்கு அதிகாரப்பூர்வமாக பயிற்சியாளர் அனுபவம் இல்லை என்றாலும், 2021 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட்டுள்ளார். மேலும், சிஎஸ்கே அணியில் தனது ஓய்வுக்குப் பிறகு அவர் ஆலோசகராக செயல்படுவார் எனவும் கூறப்படுகிறது. தற்போது ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ள தோனி, மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
