மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது வீரர்கள் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பது விதியாகவே இருக்கிறது. சர்வதேச அளவில் விளையாடும் போது வீரர்கள் தங்களுடைய உடல் பிட்னஸை சரியாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் அணியில் இடம் கிடைக்காது என்ற ஒரு நிலை இருக்கிறது.
இந்தியாவில் இடம்பெற வேண்டும் என்றால் யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதியை விராட் கோலி கேப்டனாக இருக்கும்போது கொண்டு வந்தார். ஆனால் உடல் தகுதி பிரச்சனை இருந்தால் அணியிலே விளையாட முடியாது என்ற எழுதப்படாத ஒரு விதியை தோனி கேப்டனாக இருந்த போது உருவாக்கப்பட்டதாக இந்திய அணியின் முன்னாள் பில்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது புத்தகத்தில் எழுதியுள்ள அவர், 2014 ஆம் ஆண்டு இந்தியாவும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் அக்டோபர் மாதம் டெல்லியில் ஒரு நாள் போட்டியில் விளையாடியதாக தெரிவித்துள்ளார். அதில் இந்திய அணி வெற்றி பெறும் தருவாயில் இருந்த போதும் மோசமான பில்டிங் காரணமாக அந்த போட்டியில் இந்தியா தோற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பில்டிங்கில் இந்திய அணி சொதப்பியதால் அப்போதைய கேப்டனாக இருந்த தோனி கடும் கோபத்தில் வீரர்கள் உடை மாற்றும் அறைக்கு சென்று தோனி கடுமையாக அனைவரிடம் நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்போது தோனி பேசுகையில் நமது முழு திறமை வெளிப்படுத்தி நாம் விளையாடவில்லை. நாம் பல விஷயங்களை மிஸ் செய்கின்றோம். இது எல்லாம் உணர்ந்து விளையாட வேண்டும்.
வீரர்களுக்கு உடல் தகுதி என்பது மிகவும் முக்கியம். வீரர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு உடல் தகுதியும் எட்டவில்லை என்றால் 2015 உலகக் கோப்பை தொடரில் விளையாட முடியாது. நீங்கள் எவ்வளவு சாதித்தாலும் உடல் தகுதி இல்லை என்றால் உலகக் கோப்பை தொடரில் நீங்கள் இடம் பெற முடியாது என்று தோனி கடும் கோபமாக பேசியதாக ஸ்ரீதர் கூறியுள்ளார். உடல் தகுதி விஷயத்தில் தோனி தான் இந்திய அணியின் முன்னோடியாக இருந்ததாக ஸ்ரீதர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.