லாகூர் : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி மீது பாகிஸ்தான் வீரர் சையது அஜ்மல் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை வைத்து இருக்கிறார். 350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய தோனி இதுவரை 21 முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.
10 ஆயிரம் ரன்களுக்கு மேலும் 321 கேட்ச்களும் 123 ஸ்டம்பிங்களும் மூன்று ஐசிசி கோப்பைகளையும் தோனி வென்றிருக்கிறார். அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் வரிசையில் தோனி ஏழாவது இடத்தை தான் பிடித்திருக்கிறார்.

ஆனால் பாகிஸ்தான் வீரர் அஜ்மல், தோனி ஆட்டநாயகன் விருது வென்றது குறித்து குற்றம் சாட்டியிருக்கிறார். 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான அணி மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. இதுகுறித்து பேசிய அஜ்மல் மூன்றாவது ஒருநாள் போட்டியில் நாங்கள் இந்திய அணியை 175 ரன்களில் சுருட்டினோம். நான் இந்தியாவில் விளையாடிய ஒரே ஒரு தொடர் அது மட்டும் தான்.
முதல் இரண்டு போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். மூன்றாவது ஒருநாள் போட்டியில் நான் ஐந்து விக்கெட்டுகளை சாய்த்தேன்.இதுதான் என்னுடைய சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான செயல்பாடு ஆகும். அந்தப் போட்டியில் இந்தியா 175 ரன்கள் எடுத்திருந்தபோது தோனி வெறும் 18 ரன்கள் தான் சேர்த்தார். இரண்டு கேட்சுகளை கூட விட்டார். ஆனால் என்னுடைய துரதிர்ஷ்டம் எனக்கு ஆட்ட நாயகன் விருதை வழங்காமல் தோனிக்கு கொடுத்தார்கள்.
ஒரு போட்டியில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்கள் தானே ஆட்ட நாயன் விருதை பெறவேண்டும். ஆனால் தோனி இரண்டு கேட்ச்சுகளை விட்ட பிறகும் இந்தியா அந்தப் போட்டியில் வென்றதால் தோனிக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது. இது பெரும் அநீதி என்று அஜ்மல் குற்றம் சாட்டியுள்ளார். அஜ்மல் அந்த தருணத்தில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக ஒரு நாள் மற்றும் டி20 என இரண்டு போட்டிகளிலுமே இருந்தார்.
எனினும் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் ஒருமுறை கூட ஆட்டநாயகன் விருதை வென்றதில்லை. அவர் விளையாடிய 113 போட்டிகளில் இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியும் அஜ்மலுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைக்கவில்லை. எனினும் அஜ்மலின் இந்த பேச்சில் உண்மை இல்லை. அவர் அந்த ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் இந்தியா 167 ரன்கள் தான் அடித்தது.
இதில் அஜ்மல் சொன்னது போல் தோனி 18 ரன்கள் அடிக்க வில்லை. 36 ரன்கள் எடுத்தார். மேலும் அந்தப் போட்டியில் தோனி கேட்சை பெரிய அளவில் ஏதும் விடவில்லை ஒரே ஒரு கேட்ச் வாய்ப்பு அதுவும் வாய்ப்பு என்று கூட சொல்ல முடியாத அளவு கடினமான வாய்ப்பாக அது அமைந்தது. மேலும் அந்த ஆட்டத்தில் தோனி அஜ்மல் மற்றும் உமர் அக்மல் ஆகிய இருவரையும் ஸ்டம்பிங் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.