மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டனான தோனிக்கு தற்போது 44 வயதாகிறது. சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடும் தோணி அடுத்த சீசனில் விளையாடினால் அவருக்கு 45 வயதை நெருங்கிவிடும்.இந்த சூழலில் தோனிக்கு கால் முட்டி பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் இன்னும் குறைந்தபாடில்லை.
இதற்காக தோனி அறுவை சிகிச்சை எல்லாம் மேற்கொண்ட போதிலும் அவரால் பழைய முறையில் பேட்டிங் செய்ய முடியவில்லை. எப்படி டிரம்ப், இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று பலமுறை சொல்லிவிட்டாரோ, அதேபோல் ஐபிஎல் ஆடுவீர்களா என கேட்கப்படும் கேள்விக்கெல்லாம் தோனி டிசம்பர் மாதம் வரை நேரம் இருக்கிறது என்று பதிலை தான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்.

இந்த சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனியிடம் மீண்டும் அதே கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி, நான் விளையாடுவேனா மாட்டேனா என்று எனக்கு கண்டிப்பாக தெரியாது. காலம் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும். டிசம்பர் மாதம் வரை எனக்கு நேரம் இருக்கின்றது.
நான் இன்னும் இரண்டு மாதம் காலம் எடுத்துக்கொண்டு அதன்பின் என்னுடைய இறுதி முடிவை அறிவிப்பேன் என்று தோனி கூறினார். அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர், நீங்கள் கண்டிப்பாக ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் சார் என்று கத்தினார். இதைக் கேட்ட தோனி அப்போ என்னுடைய மூட்டு வலியை யார் பார்த்துக் கொள்வார் என்று பதில் அளித்தார்.
இதை அடுத்து அரங்கம் முழுவதும் சிரிப்பலையில் நிரம்பியது. இந்த இரண்டு வாரத்தில் மட்டும் தோனி பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது பலரும் தோனியிடம் இதே கேள்வியை தான் கேட்டனர். ஆனால் இதற்கு தோனி சரியான விடையை இதுவரை அறிவிக்கவில்லை. ரசிகர்கள் தோனியின் மீது அன்பால் அவர் விளையாட் வேண்டும் என்று சொன்னாலும், கிரிக்கெட் வல்லுநர்கள் தோனி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்று இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.