மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இந்திய அணி, இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேலின் அதிரடி ஆட்டத்தையும் மீறி, இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளத் தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டியைப் முன்னாள் கேப்டன் தோனி நேரில் சென்று பார்த்தார். இதை அடுத்து தோனி வந்ததால் தான் இந்தியா சரியாக 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது எனவும், இந்தப் போட்டியில் நடந்த பல 7ஆம் எண் சம்பவங்களை பட்டியலிட்டு மிரள வைத்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஜெர்சி எண் 7 என்பது அனைவரும் அறிந்ததே. கிரிக்கெட்டில் 7 என்ற எண் வரும்போதெல்லாம் ரசிகர்கள் அதனை தோனியுடன் ஒப்பிட்டு, "Thala for a reason" என மீம் போடுவது வழக்கம். நேற்றைய போட்டியில் இந்திய அணி சரியாக 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது மட்டுமின்றி இந்தப் போட்டியில் பல்வேறு ஆச்சரியமான ஒற்றுமைகள் 7 என்ற எண்ணைச் சுற்றியே அமைந்துள்ளன.

இந்திய அணியின் வெற்றி வித்தியாசம்: 7 ரன்கள்.
இந்திய அணி இழந்த விக்கெட்டுகள்: 7.
இங்கிலாந்து அணி இழந்த விக்கெட்டுகள்: 7.
இந்திய வீரர் திலக் வர்மா சந்தித்த பந்துகள்: 7.
ஆட்டநாயகன் சஞ்சு சாம்சன் அடித்த சிக்ஸர்கள்: 7.
இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் அடித்த சிக்ஸர்கள்: 7.
இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் எடுத்த ரன்கள்: 7.
இப்படி போட்டி முழுவதுமே 7 என்ற எண்ணின் ஆதிக்கம் இருந்ததால், ரசிகர்கள் "தல ஃபார் எ ரீசன்" (Thala for a reason) என்ற வாசகத்தை இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்தப் போட்டியைக் காண முன்னாள் கேப்டன் தோனி வான்கடே மைதானத்திற்கு வருகை தந்திருந்தார். இந்திய அணி நெருக்கடியான நிலையில் இருந்தபோது, ஒருபுறம் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பதற்றத்துடன் காணப்பட்டார். ஆனால் மறுபுறம் தோனி மிகவும் நிதானமாகப் புன்னகையுடன் போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தன்னைச் சுற்றி உருவாக்கப்படும் இந்த 7ஆம் எண் மீம்ஸ்கள் குறித்து தோனி முன்பே ஒருமுறை பேசியுள்ளார். "எனக்கு இதன் உண்மையான காரணம் தெரியாது. இது என்னை கிண்டல் செய்வதற்காக உருவாக்கப்பட்டதா அல்லது வேடிக்கைக்காகவா என்று தெரியவில்லை. ஆனால் எதுவாக இருந்தாலும், ரசிகர்கள் இதனை எனக்குச் சாதகமான ஒரு விஷயமாகவே மாற்றியுள்ளனர். அது எனக்கு மகிழ்ச்சியே" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். நேற்றைய வெற்றியிலும் தோனியின் வருகை இந்திய அணிக்கு ராசியாக அமைந்தது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் சிறப்பான ஆட்டத்தால் (42 பந்துகளில் 89 ரன்கள்) 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் குவித்தது. இது நாக் அவுட் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேக்கப் பெத்தேல் 48 பந்துகளில் 105 ரன்கள் குவித்து பயம் காட்டினார்.

எனினும், கடைசி நேரத்தில் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சால் இங்கிலாந்து அணியை 246 ரன்களுக்குள் இந்திய அணி கட்டுப்படுத்தியது. இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.