சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் தோனிக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் அவர் முதல் இரண்டு வாரத்திற்கு எந்தவித ஒரு போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் தோனி தனது 44 வது வயதிலும் சிஎஸ்கே அணிக்காக விளையாட ஆயத்தமாகி வந்தார். தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் மட்டும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனால் தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த சீசனிலும் தோனி முழு போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. ஆனால் தோனி தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழலில் தோனிக்கு காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது.இது குணமடைய இரண்டு வாரத்திற்கு மேல் ஆகலாம்.

அதற்காக சிகிச்சையில் தோனி ஈடுபட்டு இருக்கிறார். இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு வாரத்திற்கு தோனி எந்தவித போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிஎஸ்கே அணி வெளியிட்டு இருக்கிறது. இது தோனியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பார்க்கலாம் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சோகத்தை தந்துள்ளது.
இதன் காரணமாக தோனிக்கு பதில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் பணியை செய்யலாம்.கடந்த சீசனில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 14 போட்டிகளில் களமிறங்கி மொத்தமாக 196 ரன்களை சேர்த்தார். அந்த சீசனில் மொத்தமாகவே அவர் 145 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார்.
இதுபோன்று 2024 ஆம் ஆண்டு சீசனில் 73 பந்துகளும், 2023 ஆம் ஆண்டு சீசனில் 57 பந்துகளையும் தோனி எதிர்கொண்டார்.இதனால் தோனியின் பேட்டிங் பங்கு குறித்து கிரிக்கெட் வல்லுனர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது சஞ்சு சாம்சன், உர்வில் பட்டேல் போன்ற வீரர்கள் அணியில் இருப்பதால் தோனிக்கு மாற்று வீரர்களாக அவர்கள் களமிறங்கலாம். 45 வயதை தோனி நெருங்குவதால் இதுவே அவருக்கு கடைசி சீசனாக அமையலாம் இந்த தொடரிலும் அவர் போட்டிகளில் பங்கேற்பது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.