தோனிக்கு மீண்டும் காயம்.. சிஎஸ்கே-வில் விளையாட முடியாது.. உண்மையை உடைத்த பயிற்சியாளர் பிளெம்மிங்
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி எப்போது களமிறங்குவார் என கோடிக்கணக்கான ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர். ஆனால், அவர் களமிறங்க தாமதமாவதற்கு மற்றொரு புதிய காயம் தான் காரணம் என்ற தகவலை சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தற்போது வெளியிட்டுள்ளார். முழு உடல் தகுதியுடன் அணிக்கு திரும்ப இருந்த தோனிக்கு திடீரென என்ன ஆனது, அவர் திரும்புவதில் ஏன் இவ்வளவு தாமதம் என்ற விவரங்கள் சிஎஸ்கே ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தோனி 2 வாரங்கள் ஓய்வில் இருப்பார் என சிஎஸ்கே நிர்வாகம் முதலில் தெரிவித்திருந்தது. ஆனால், 4 வாரங்கள் கடந்த நிலையிலும் அவர் இன்னும் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. நேற்றைய குஜராத் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிளெமிங், "தோனி மீண்டும் விளையாட மிகுந்த ஆர்வமாகவே உள்ளார். ஆனால், தசைப்பிடிப்பு காயம் என்பது சற்று கடினமானது. முழுமையாக குணமடையும் முன்பே அவசரப்பட்டு விளையாடினால் அது மீண்டும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்."

"ஆரம்பத்தில் அவர் குணமடைந்து பயிற்சிகளை தீவிரமாக தொடங்கினார். அப்போது, ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடியதால் அவருக்கு மீண்டும் அதே இடத்தில் 2வது முறையாக காயம் ஏற்பட்டது. இது எங்களுக்கு ஒரு பெரிய பின்னடைவாக அமைந்தது. அதனால் தான் அவர் அணிக்கு திரும்புவதில் நாங்கள் நினைத்ததை விட அதிக தாமதம் ஏற்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
காயத்தில் இருந்து மீண்டு வரும் தோனி அவ்வப்போது வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து வருகிறார். குறிப்பாக கடந்த வாரம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு அவர் விக்கெட் கீப்பிங் பயிற்சியிலும் ஈடுபட்டார். இதனால் அவர் நிச்சயம் ஆடும் லெவனில் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வான்கடே மைதானத்திற்கே வரவில்லை. அதேபோல், நேற்று சேப்பாக்கத்தில் நடந்த குஜராத் அணிக்கு எதிரான உள்ளூர் போட்டியிலும் அவர் மைதானத்தில் தென்படவில்லை. பிசியோதெரபிஸ்ட் உதவியுடன் அவர் தொடர்ந்து தீவிரமாக காயத்தில் இருந்து மீண்டு வருவதாக பிளெமிங் கூறினார்.
நடப்பு சீசனில் இதுவரை சென்னை அணி 8 போட்டிகளில் விளையாடி 5 படுதோல்விகளை சந்தித்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள சிஎஸ்கே அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு மிகவும் மங்கலாகவே உள்ளது. சிஎஸ்கே அணி தனது அடுத்த லீக் போட்டியில் மே 2ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. பிளெமிங் கூறியுள்ள விளக்கத்தின்படி பார்த்தால், முழுமையாக குணமடையாத தோனி அந்த போட்டியிலும் விளையாடுவது சந்தேகமே. அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டுள்ள சிஎஸ்கே அணிக்கு தோனியின் இந்த காயம் மிகப்பெரிய இடியாக இறங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications
