சென்னை: இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானும், முன்னாள் கேப்டனுமான தோனி, தனது புதிய வியாபார முதலீடு குறித்து அறிவித்துள்ளார். கிரிக்கெட் களத்தில் பல சாதனைகளைப் படைத்த அவர், தற்போது உணவுத் துறையில் தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார். வேகமாக வளர்ந்து வரும் உணவு பிராண்டான 'ஹவுஸ் ஆஃப் பிரியாணி' (House of Biryan - HOB) நிறுவனத்தில், தோனி முதலீட்டாளராக இணைந்துள்ளார்.
'ஹவுஸ் ஆஃப் பிரியாணி' நிறுவனம், "மேரி வாலி பிரியாணி" (எனக்கான பிரியாணி) என்ற தனித்துவமான பிரியாணி ஆர்டர் செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான சுவை மற்றும் காரத்தின் அளவைத் தாங்களே தேர்வு செய்து, தங்களுக்கு ஏற்ற பிரியாணியைத் தயாரித்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு பிரியாணியையும் ஒரு தனிப்பட்ட அனுபவமாக மாற்றுவதே இந்த பிராண்டின் நோக்கம்.
அதாவது உங்கள் வீட்டை நீங்களே இன்டீரியர் டிசைன் செய்யலாம், உங்கள் ஆடைகளில் என்ன டிசைன் வேண்டும் என நீங்களே முடிவு செய்யலாம் என்பதன் அடுத்த கட்டமாக நமக்கான பிரியாணியை நாமே டிசைன் செய்து சாப்பிடலாம் என்பது தான் அந்த புதுமையான உத்தி. இதில் தான் தோனி முதலீடு செய்துள்ளார்.

இந்த புதிய முயற்சி குறித்துப் பேசிய எம்.எஸ். தோனி, "பிரியாணியை நாம் ரசித்து உண்ணும் விதத்தையே மறுவரையறை செய்யும் 'ஹவுஸ் ஆஃப் பிரியாணி' பிராண்டுடன் ஒரு முதலீட்டாளராக இணைவதில் மகிழ்ச்சி. அவர்களின் 'மேரி வாலி பிரியாணி' கான்செப்ட், சுவைகளையும், மசாலாக்களையும் நமக்கு ஏற்றவாறு மாற்றி, ஒவ்வொரு உணவையும் தனிப்பட்டதாக மாற்றுகிறது" என்றார்.
"பாரம்பரியமான சுவையை, நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து, இந்தியாவின் விருப்பமான உணவை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் அவர்களின் எதிர்காலத் திட்டம்தான் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இந்தப் பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றும் தோனி கூறினார்.
சமீபத்தில் முடிந்த 2025 ஐபிஎல் சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் மற்றும் காயங்களால் பல மோசமான தோல்விகளை சந்தித்தது. இதுகுறித்து பேசிய தோனி, 2026 ஐபிஎல் சீசனுக்கு ருதுராஜ் கெய்க்வாட்தான் கேப்டனாகத் தொடர்வார் என்பதை உறுதிப்படுத்தினார். மேலும், வரவிருக்கும் மினி-ஏலத்தில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தவும், முக்கிய பலவீனங்களை சரிசெய்யவும் தாங்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
2026 ஐபிஎல்-ல் தோனி விளையாடுவாரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியாத நிலையில், சிஎஸ்கே அணியுடனான தனது வாழ்நாள் பந்தம் தொடரும் என்றும், வரவிருக்கும் பல ஆண்டுகளுக்குத் தான் இந்த அணியுடன் தொடர்பில் இருப்பேன் என்றும் அவர் உறுதியளித்தார். கிரிக்கெட், விவசாயம், சினிமா எனப் பன்முகத் திறமைகளைக் காட்டி வரும் தோனி, தற்போது உணவுத் துறையிலும் கால் பதித்திருப்பது, அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.