அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற உள்ளது. இதுவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டின் கடைசி லீக் போட்டியாகும். இந்த நிலையில், தோனி இந்தப் போட்டியுடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னாள் வீரர் முகமது கைஃப், "இதுதான் தோனியின் கடைசிப் போட்டி. அவர் மைதானத்திற்கு வரும்போது மஞ்சள் நிற உடையை அணிந்து அவருக்கு அன்பைச் செலுத்துங்கள்," என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். முகமது கைஃப் இது குறித்து கூறியதாவது:

"ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை பண்டிகை போல கொண்டாட வேண்டும். தோனி ஒரு கேப்டனாகவும் வீரராகவும் கடைசியாக ஆடுகளத்துக்கு வர இருக்கிறார். மைதானத்தை மஞ்சள் நிறத்தில் நிரப்பி அவருக்கு அன்பைச் செலுத்துங்கள். அவர் தனது கடைசிப் போட்டியை வெல்ல வேண்டும் என்றும் நினைப்பார்."
"சென்னை சூப்பர் கிங்ஸ் என்றால் தோனி; தோனி என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ். 8 மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்துவிட்டு, மூன்று மாதங்கள் கிரிக்கெட் விளையாடுவது என்பது மிகவும் கடினமான விஷயம். இதை தோனி இந்த ஆண்டு புரிந்துகொண்டிருப்பார்," என்று முகமது கைஃப் கூறி இருக்கிறார்.
2025 ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டார். 5 போட்டிகளுக்குப் பிறகு அவர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். அதன் பிறகு தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
தற்போது 43 வயதான நிலையில் தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார். அடுத்த ஆண்டு 44 வயதில் அவரால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆண்டு தோனியின் பேட்டிங் அத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும், அவரது கேப்டன்சியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை.
சிஎஸ்கே அணி முதல் பாதிப் போட்டிகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அணியை கட்டமைக்கும் வேலைகளை செய்யத் துவங்கிவிட்டது. இந்த நிலையில், தோனி மீண்டும் 2026 ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமா அல்லது பாதகமா? இந்த விவாதங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில்தான் முகமது கைஃப் அவர் ஓய்வு பெற இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.